புதுடெல்லி: தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார், மத்திய அமைச்சர் ராமதாஸ் அதாவாலே மற்றும் மாநிலங்களவைத் துணை தலைவர் ஹரிவன்ஸ் நாராயண் சிங் உட்பட 37 பேர் நேற்று போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர். மாநிலங்களவையில் காலியான 55 எம்.பி இடங்களுக்கு 17 மாநிலங்களில் இருந்து 55 பேர் வேட்புமனு தாக்கல் செய்தனர். இந்த தேர்தல் வரும் 26ம் தேதி நடக்கிறது. இந்நிலையில் வேட்பு மனு தாக்கல் செய்தவர்களில் 37 பேர் நேற்று போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர்.
மகாராஷ்டிராவில் உள்ள 7 இடங்கள், தமிழகத்தில் 6 இடங்கள், அரியானா, சட்டீஸ்கர் மற்றும் தெலங்கானாவில் தலா 2 இடங்கள், ஒடிசாவில் 4 இடங்கள், பீகார் மற்றும் மேற்குவங்கத்தில் 5 இடங்கள், அசாமில் 3 இடங்கள், இமாச்சலப் பிரதேசத்தில் ஒரு இடத்துக்கு எம்.பி.க்கள் நேற்று போட்டியின் தேர்வாயினர்.
இவர்களில் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார், மத்திய அமைச்சர் ராமதாஸ் அதாவாலே, மாநிலங்களவைத் துணைத் தலைவர் ஹரிவன்ஸ் நாராயண் சிங், காங்கிரஸ் கட்சியில் இருந்து வெளியேறி சிவசேனாவில் சேர்ந்த பிரியங்கா சதுர்வேதி, மக்களவை முன்னாள் துணை சபாநாயகர் தம்பித்துரை, தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன், கே.டி.எஸ்.துளசி, காங்கிரஸ் கட்சியின் தீபிந்தர் சிங் ஹூடா ஆகியோர் முக்கியமானவர்கள். மீதமுள்ள 18 இடங்களுக்கு வரும் 26ம் தேதி தேர்தல் நடக்கிறது.