×

தனிமை முத்திரை குத்தப்பட்ட 4 பேர் சூரத் செல்ல முயற்சி: ரயிலில் இருந்து கீழே இறக்கப்பட்டனர்

மும்பை: கொரோனா அறிகுறிகள் இருக்கலாம் என இடது கையில் முத்திரைக் குத்தப்பட்ட நான்கு பேர் மும்பையில் இருந்து ரயிலில் சூரத் சென்ற போது  ரயில்வே அதிகாரிகளிடம் சிக்கினர். அவர்கள் 4 பேரும் ரயிலில் இருந்து பாதி வழியில் கீழே இறக்கப்பட்டனர். இந்த 4 பேரும் சமீபத்தில் ஜெர்மனியில்  இருந்து மும்பை வந்தனர். மும்பை விமான நிலையத்தில் அவர்களுக்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் அவர்களுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இல்லை  என்பது உறுதி செய்யப்பட்ட போதிலும், அவர்களுக்கு அதற்கான அறிகுறிகள் இருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் இடது கைகளில் முத்திரைக்  குத்தப்பட்டு, வீட்டில் தங்களை தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டு இருந்தது.

ஆனால், இந்த நான்கு பேரும் குஜராத் மாநிலத்தில் உள்ள சூரத் நகருக்கு செல்வதற்காக பாந்த்ரா டெர்மினஸ்-டெல்லி இடையேயான கரீப்ரத் ரயிலில்  புறப்பட்டுச் சென்றனர். அவர்களின் கைகளில் முத்திரை குத்தப்பட்டிருப்பதை பார்த்த சக பயணிகள், இது பற்றி மேற்கு ரயில்வே கட்டுபாட்டு அறைக்கு  தகவல் தெரிவித்தனர். உடனே, ரயில்வே அதிகாரிகள் கரீப்ரத் ரயில் டிரைவரை தொடர்பு கொண்டு ரயிலை பால்கர் ஸ்டேஷனில் நிறுத்த உத்தரவிட்டனர்.

அங்கு ரயில் நிறுத்தப்பட்டதும், 4 பேரையும் ரயில்வே போலீசார் கீழே இறக்கினர். அதன் பிறகு, ரயில் புறப்பட்டுச் சென்றது. பின்னர், 4 பேரும் பால்கரில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு, மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டது. அதில், அவர்களுக்கு கொரோனா பாதிப்பு இல்லை  என்பது உறுதியானது. இதனால், 4 பேரும் சாலை மார்க்கமாக சூரத் செல்ல அனுமதிக்கப்பட்டனர்.

Tags : Surat ,persons ,Train Corona , Corona, seal, 4 persons, Surat, attempt
× RELATED ஆடு திருடமுயன்ற இரண்டு பேர் கைது