×

உச்ச நீதிமன்றத்தில் கூட்டம்: தலைமை நீதிபதி அதிருப்தி

புதுடெல்லி: ‘‘உச்ச நீதிமன்ற வளாகத்துக்கு வருபவர்கள் சுய கட்டுப்பாடு இல்லாமல் இப்படி உலாவி திரிந்தால் நாங்கள் நீதிமன்றத்தை மூட வேண்டியது வரும்’’ என்று தலைமை நீதிபதி பாப்டே அதிருப்தி தெரிவித்தார். குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக நாடு முழுவதும் நடைபெறும்  போராட்டங்களுக்கு தடை விதிக்க வேண்டும் எனக்கோரி மதுரையை சேர்ந்த கே.கே.ரமேஷ் என்பவர்  உச்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளார்.  அதில், ‘‘குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிரான அனைத்து போராட்டங்களையும் தடை செய்ய வேண்டும். தடையை மீறி போராட்டம் நடத்துபவர்கள்  மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்று கூறியுள்ளார்.

இதற்கிடையே, நாடு முழுவதும் பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்படும் மதிய உணவு திட்டத்தின் தரம் தொடர்பாக தானாக முன்வந்து உச்ச நீதிமன்றம்  வழக்குப் பதிவு செய்தது. இது தொடர்பாக பதில் அளிக்க அனைத்து மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகளுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது. அதில், மதிய உணவு திட்டத்தில் வழங்கப்படும் உணவுகளில் தரம் இல்லை என்ற குற்றச்சாட்டுகள் அடிப்படையில் இதுதொடர்பான விளக்கம்  கோரப்பட்டுள்ளது.

மற்றொரு வழக்கு விசாரணையின் போது, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே கூறுகையில், ‘‘நாடு முழுவதும் கொரோனா தடுப்பு நடவடிக்கை எடுத்தும், உச்ச நீதிமன்ற வராண்டாக்களில் ஏன் கூட்டம் அதிகமாக உள்ளது; ஏன் அதிக அளவில் நபர்கள் சுற்றி திரிகின்றனர். அவர்கள் சுய கட்டுப்பாடோடு  இல்லாமல் இப்படி உலாவி திரிந்தால் நாங்கள் நீதிமன்றத்தை மூட வேண்டியது வரும்’’ என்று கோபத்துடன் தெரிவித்தார்.

Tags : Chief Justice ,Supreme Court ,Meeting , Supreme Court, Meeting, Chief Justice, dissatisfaction
× RELATED உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிக்கு மாஜி...