பெரம்பூர்: ஓட்டேரி புளியந்தோப்பு ஆகிய பகுதிகளில் டாஸ்மாக் கடை திறப்பதற்கு முன்பு மதுபாட்டில்கள் கள்ள சந்தையில் விற்கப்படுவதாக தொடர்ந்து போலீசாருக்கு தகவல்கள் வந்தன. இதனையடுத்து ஓட்டேரி போலீசார் ஓட்டேரி செமாத்தம்மன் காலனி பகுதியில் நேற்று காலை சோதனை செய்தனர். அப்போது ஒரு வீட்டில் மதுபாட்டில்கள் அதிகமாக வைத்து விற்பனை செய்து வந்ததை கண்டறிந்தனர். பின்னர் அங்கு சென்ற போலீசார் அந்த வீட்டிலிருந்து சுமார் 30 குவார்ட்டர் பாட்டில்கள் பறிமுதல் செய்தனர். அங்கிருந்தவர்களிடம் நடத்திய விசாரணையில், மங்களபுரம் பகுதியைச் சேர்ந்த விக்னேஷ் (30) மற்றும் அதே பகுதியைச் சேர்ந்த கலைவாணி (32) ஆகியோரை கைது செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.