புதுடெல்லி: தொலைத்தொடர்பு நிறுவனங்கள் ஏஜிஆர் கட்டண பாக்கியை செலுத்துவதற்கு 20 ஆண்டு அவகாசம் கோரிய மத்திய அரசின் புதிய திட்டத்தை நீதிமன்றம் நிராகரித்தது. அதோடு, தொலைத்தொடர்பு நிறுவனங்கள் சுய மதிப்பீடு செய்வது நீதிமன்றத்தை அவமதிக்கும் குற்றச்செயல் என தெரிவித்துள்ள உச்ச நீதிமன்றம், கட்டண பாக்கியை செலுத்த உத்தரவிட்டனர். புதிய தொலைத்தொடர்பு கொள்கையின்படி, தொலைத்தொடர்பு சேவை வழங்கும் நிறுவனங்கள் தங்கள் மொத்த வருவாயில் குறிப்பிட்ட சதவீதத்தை உரிம கட்டணமாக மத்திய அரசுக்கு செலுத்த வேண்டும். இதை எதிர்த்து பாரதி ஏர்டெல் உள்ளிட்ட தொலைத்தொடர்பு நிறுவனங்கள் தாக்கல் செய்த மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. நிலுவையை வட்டியுடன் மொத்தம் 1.47 லட்சம் செலுத்த உத்தரவிட்டது. இதையடுத்து, கட்டணம் செலுத்த கூடுதல் அவகாசம் கோரிய மனுவையும் தள்ளுபடி செய்தது.
ஏஜிஆர் கட்டணமாக. வோடபோன் 53,038 கோடி மேல் செலுத்த வேண்டும். ஏர்டெல் 35,586 கோடி, டாடா டெலசர்வீசஸ் 13,823 கோடி செலுத்த வேண்டும். ஏஜிஆர் கட்டண பாக்கியில் ஒரு பகுதியாக வோடபோன் ஐடியா 2 தவணைகளில் 3,500 கோடி செலுத்தியிருந்தது. இந்நிலையில், மேலும் 3,354 கோடியை கடந்த 16ம் தேதி செலுத்தியது. இத்துடன் சேர்த்து மொத்தம் 6,854 கோடி செலுத்தியுள்ளது. சுய மதிப்பீடு அடிப்படையில் அசல் தொகை செலுத்தப்பட்டுள்ளதாக இந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதற்கிடையில், அன்றைய தினமே, தொலைத்தொடர்பு நிறுவனங்கள் ஏஜிஆர் கட்டணத்தை 20 ஆண்டுக்கு தவணையில் செலுத்த மத்திய அரசு திட்டம் வகுத்துள்ளதாகவும், இதற்கு அனுமதி தர வேண்டும் எனக்கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு செய்தது. இது, நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசின் 20 ஆண்டு தவணை திட்டத்தை ஏற்க மறுத்த உச்ச நீதிமன்றம், சுய மதிப்பீடு செய்வதை கண்டித்து உத்தரவு பிறப்பித்தது. அதில் கூறியிருப்பதாவது: தொலைத்தொடர்பு நிறுனங்களின் ஏஜிஆர் கட்டண பாக்கி தொடர்பாக உச்ச நீதிமன்றம் ஏற்கெனவே உத்தரவு பிறப்பித்துள்ளது.
இந்த உத்தரவே இறுதியான மற்றும் முழுமையான உத்தரவாகும். எனவே, தொலைத்தொடர்பு நிறுவனங்கள் தாங்களே சுயமாக மறு மதிப்பீடு செய்ய தேவையில்லை. அதோடு, 20 ஆண்டுகளுக்கு தவணை முறையில் செலுத்த அனுமதி கோரும் அரசின் கோரிக்கைக்கு எந்த நியாயமான காரணமும் இல்லை. இதுதொடர்பாக 2 வாரத்துக்கு பிறகு விசாரிக்கப்படும். சுய மதிப்பீடு செய்ததன் மூலம், தொலைத்தொடர்பு நிறுவனங்கள் மிகப்பெரிய குற்றத்தை புரிந்துள்ளன. எனவே, சுயமதிப்பீடு செய்வதற்கு அனுமதி அளித்த தொலைத்தொடர்பு துறை செயலாளர் மற்றும் அரசு அதிகாரிக்கு சம்மன் அனுப்ப முடியும். ஏஜிஆர் பற்றிய பொய்யான செய்திகளை வெளியிடும் தொலைத்தொடர்பு துறை நிர்வாக இயக்குநர்கள் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்படும். சட்ட விதிகளின் அடிப்படையில்தான் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இதில் எந்த மாற்றமும் கிடையாது. எனவே, நிறுவனங்கள் நீதிமன்ற உத்தரவுப்படி கட்டணத்தை செலுத்த வேண்டும் என உத்தரவிட்டன.