சென்னை: தமிழகத்தில் அரசு அலுவலங்களில் ஊழியர்கள் அனைவருக்கும் கொரோனா பரிசோதனையானது செய்யப்பட்டு வருகிறது. தமிழகத்தில் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையில் அரசும் அதேபோன்று சுகாதாரத்துறையும் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. இந்த நோய் மற்றவர்களுக்கு பரவிவிட கூடாது என்பதற்காக பள்ளி, கல்லூரிகள், வணிக வளாகங்கள், பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்கள் உள்ளிட்டவை மார்ச் 31ம் தேதி வரை மூடப்பட்டிருக்கும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. அதே நேரத்தில் அரசு அலுவலகங்கள், மாநிலம் முழுவதும் செயல்பட்டு வருகின்றன. எனவே இங்கு மேற்கொள்ளவேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து தலைமை செயலாளர் சண்முகம் அனைத்து துறை அதிகாரிகளுக்கும் சுற்றறிக்கை ஒன்றினை அனுப்பி இருக்கிறார். அதில் எந்தெந்தமாதிரியான விதிமுறைகளை பின்பற்ற வேண்டும் உள்ளிட்ட கட்டளைகள் இடம் பெற்றிருக்கின்றன. காவல்துறை தலைவர், மாநகர காவல் ஆணையர்கள், அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் இந்த உத்தரவானது பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதில் சுமார் 20 வகையான கட்டளைகள் இடம் பெற்றிருக்கின்றன. அதில் முக்கியமாக தினமும் பணிக்கு வரக்கூடிய அரசு ஊழியர்களுக்கு தெர்மல் ஸ்கேனிங் நடத்தப்பட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கின்றது. அரசு ஊழியர்கள் யாருக்கேனும், காய்ச்சல், மூச்சிறைப்பு, இருமல், சளி போன்றவை இருந்தால் அவர்கள் உடனடியாக அருகிலுள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட வேண்டும். அல்லது அவர்களை வீட்டிலேயே இருக்கும் படி அறிவுறுத்த வேண்டும்.
* அரசு ஊழியர்கள் சோப்பு போட்டு கைகழுவுவது உள்ளிட்ட சுய சுத்தத்தை கடைப்பிடிக்க வேண்டும்.
* அவசர அவசியம் இருந்தால் தவிர பொதுமக்கள் அரசு அலுவலகத்துக்கு வருவதை தவிர்க்க வேண்டும்.
* அரசு அலுவலகங்களை பொதுமக்கள் இ - மெயில், தொலைபேசி மூலம் தொடர்பு கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.
* அரசு அலுவலகங்களில் எந்தவிதமான கூட்டங்களும் நடத்த கூடாது.
* கிளை அலுவலகங்களில் உள்ள ஊழியர்களை தேவையின்றி தலைமை அலுவலகத்துக்கு அழைக்க கூடாது.
* அரசு அலுவலகம் வரும் பொதுமக்கள் யாருக்காவது கொரோனா இருந்தால் சிகிச்சைக்கு அனுப்ப வேண்டும் போன்ற கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.