×

அதிகம் மக்கள் கூடும் இடங்களை மட்டுமே மூட உத்தரவிடப்பட்டுள்ளது..உணவுபொருட்கள் விற்கும் நிலையங்கள் செயல்பட தடையில்லை: சென்னை மாநகராட்சி ஆணையர்

சென்னை: அதிகம் மக்கள் கூடக்கூடிய இடங்களை மட்டுமே மூட உத்தரவிடப்பட்டுள்ளதாகவும், உணவுபொருட்கள் விற்கும் நிலையங்கள் செயல்பட தடையில்லை எனவும் சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் கூறியுள்ளார். சென்னையில் கொரோனா வைரஸ் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பள்ளிகள், கல்லூரிகள், திரையரங்குகள், ஷாப்பிங் மால்கள் உள்ளிட்ட பொதுமக்கள் கூடும் இடங்களை மூட அரசு உத்தரவிட்டுள்ளது. மீறித் திறந்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று சென்னை மாநகராட்சி எச்சரித்துள்ளது. இந்நிலையில் இதைப் பயன்படுத்தி உணவுப் பொருட்கள் விற்கும் கடைகளை அடைப்பதும், பொருட்களை அதிக விலைக்கு விற்பதும் நடந்து வருகிறது. இதையடுத்து சென்னை மாநகராட்சி ஆணையர் எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளார்.

அதாவது, சென்னையில் ஷாப்பிங் மால்கள், திரையரங்குகள் மட்டுமே மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது பழம், காய்கறிகள், பால், இறைச்சி, மீன் மார்க்கெட், மளிகை பொருட்கள் உள்ளிட்ட மற்ற கடைகள், சிறிய கடைகளுக்குப் பொருந்ததாது. நமது முக்கியக் குறிக்கோள் வைரஸ் பரவலைத் தடுப்பது மட்டுமே. சாதாரண பொதுமக்களைப் பாதிக்கும் நடவடிக்கை அல்ல. தயவுசெய்து இந்த விவரத்தை தெளிவாக அனைவரிடமும் கொண்டுசென்று வீண் வதந்திகள் பரவுவதைத் தடுக்கவும். இத்தகைய வதந்திகளைப் பரப்பும் நபர்கள் குற்றமிழைத்தவர்களாகக் கருதி அவர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை சட்டப்படி எடுக்கப்படும். இந்த இக்கட்டான நேரத்தில் நமது ஒற்றுமையைக் காட்டுவோம் என்று கூறியுள்ளார்.


Tags : places ,Commissioner ,Chennai Corporation , Corona Virus, Chennai, Corporation Commissioner
× RELATED கொடைக்கானலில் குடியிருப்புக்குள் புகுந்தது காட்டு மாடுகள்