×

அமெரிக்காவின் அனைத்து மாநிலங்களுக்கும் பரவிய ஆட்கொல்லி கொரோனா வைரஸ்..: ஒரே மாதத்தில் 100க்கும் மேற்பட்டோர் பலி!

வாஷிங்டன்: அமெரிக்காவின் அனைத்து மாநிலங்களுக்கும் ஆட்கொல்லி கொரோனா வைரஸ் பரவியுள்ளதால் அங்கு பதற்றம் ஏற்பட்டுள்ளது. சீனாவின் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் கண்டுபிடிக்கப்பட்ட ஆட்கொல்லி கொரோனா வைரஸ் தற்போது 150க்கும் நாடுகளில் பரவி பெரும் உயிர் சேதத்தை ஏற்படுத்தி வருகிறது. கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு உலகம் முழுவதும் உயிரிழந்தோர் எண்ணிக்கை எட்டாயிரத்தை தொட்டுள்ளது. 1,97,135 பேருக்கு கொரோனா பாதிப்பு உள்ளது. இந்நிலையில், அமெரிக்காவிலும் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. வாஷிங்டன் மாநிலத்தில் பிப்ரவரி 26ம் தேதி கொரோனா வைரசுக்கு முதல் உயிரிழப்பு ஏற்பட்டது. அதன்பின்னர் ஒவ்வொரு மாநிலமாகப் பரவி உயிரிழப்பு அதிகரித்த வண்ணம் உள்ளது. இந்நிலையில், அமெரிக்காவின் 50 மாநிலங்களிலும் கொரோனா வைரஸ் பரவி உள்ளது. நேற்று வரை அமெரிக்காவில் கொரோனா வைரசால் சுமார் 105 பேர் உயிரிழந்துள்ளனர். பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 6,500-ஐ தாண்டி உள்ளது.

கிழக்கு கடற்கரை பகுதியில் நியூயார்க் மற்றும் மேற்கு பகுதியில் வாஷிங்டன் ஆகிய மாநிலங்களின் கொரோனாவின் தாக்கம் அதிகமாக உள்ளது. அதாவது, தற்போதைய நிலவரப்படி, நியூயார்க்கில் 1,708 பேருக்கும், வாஷிங்டன்னில் 1,013 பேருக்கும் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அதேபோல், கலிபோர்னியாவில் 718 பேருக்கும், நியூ ஜெர்சியில் 267 பேருக்கும் கொரோனா இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதில், குறைந்தளவு பாதிப்படைந்தோர் கொண்ட பகுதிகளாக வடக்கு டகோடா மற்றும் அலாஸ்கா மாநிலங்கள் உள்ளன. கொரோனாவை தீவிரமாக பரவும் தொற்று நோய் என உலக சுகாதார அமைப்பு பிரகடனம் செய்ததையடுத்து, உலகம் முழுவதும் சுகாதார முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் முடுக்கி விடப்பட்டுள்ளன. இந்த வைரசின் தாக்கம் ஜூலை அல்லது ஆகஸ்டு மாதம் வரை நீடிக்கலாம் என அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறியுள்ளார். பயண கட்டுப்பாடுகள் மற்றும் அரசின் பல்வேறு அறிவுறுத்தல்களால் ஏராளமான மக்கள் வீடுகளிலேயே முடங்கி கிடக்கின்றனர். நியூ ஜெர்சியில் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.


Tags : states ,United States , Coronavirus, USA, Fatalities, New York, Washington
× RELATED இஸ்ரேல் மீது ட்ரோன், ஏவுகணை தாக்குதலை தொடங்கியது ஈரான்