சென்னை: சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியவர் மீண்டும் தனி வார்டில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். கொரோனா பாதித்த நபர் தற்போது மீண்டும் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். ஓமன் நாட்டில் இருந்து கடந்த 4ம் தேதி திரும்பிய காஞ்சிபுரத்தை சேர்ந்தவருக்கு கொரோனா தொற்று பாதிப்பு இருந்தது. உடனடியாக அவர், ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பின்னர் அங்குள்ள மருத்துவர்கள் அறிவுறுத்தலின் பேரில் அவர், சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். கிட்டத்தட்ட 10 நாட்களுக்கு மேலாக அவருக்கு சிகிச்சை நடைபெற்று வந்தது. நேற்று முன்தினம் அவருடைய உடல்நிலை சீரானதை தொடர்ந்து அவர் வீட்டிற்கு அனுப்பப்பட்டதாக சுகாதாரத்துறை அமைச்சர் ட்விட்டர் மூலமாக உறுதிப்படுத்தினார். இதையடுத்து, நேற்று நடைபெற்ற இரண்டு செய்தியாளர்கள் சந்திப்பிலும் அவர் மருத்துவமனையில் இருந்து காஞ்சிபுரத்தில் உள்ள அவருடைய வீட்டிற்கு அனுப்பிவைக்கப்பட்டதாக சுகாதாரத்துறை அமைச்சர் தெளிவுபடுத்தினார்.
இந்த சூழலில் மீண்டும் காஞ்சிபுரம் இன்ஜினியர் சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் தனி வார்டில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையின் முதல்வர் டாக்டர் ஜெயந்தியிடம் கேட்டபோது, அவருடைய உடல்நிலை சீராக உள்ளது. அவருக்கு கொரோனா தொற்று இல்லை. அவர் எடுத்துக்கொள்ள வேண்டிய மருந்துகள் என்ன என்ன என்பது குறித்த மருத்துவ பரிசோதனைக்கு வந்துள்ளார். மற்றபடி அவருடைய உடல்நிலை சீராக உள்ளது. ஆதலால் அவர் தனி வார்டில் அனுமதிக்கப்படவில்லை என்ற தகவலை பதிவுசெய்துள்ளார். நேற்று முன்தினம் கொரோனா முழுமையாக குணடைந்தது என்று வீடு திரும்பிய நிலையில் இன்று மீண்டும் அவர், சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு வந்திருப்பது முக்கியமாக பார்க்கப்படுகிறது.