×

தெலுங்கானாவில் தொடரும் கொடூரமான கொலைகள்: முகம் சிதைந்த நிலையில் அலங்கோலத்துடன் பெண் சடலம் மீட்பு!

ரங்காரெட்டி: தெலுங்கானாவில் உடம்பில் துளியும் ஆடையில்லாமல் கொலை செய்யப்பட்டு முகம் சிதைந்த நிலையில் பெண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தெலுங்கானாவில் கடந்த வருடம் நவம்பரில் பெண் மருத்துவர் கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டு கொல்லப்பட்ட சம்பவம் நாட்டையே உலுக்கியது. இந்த நிலையில் அதே மாவட்டத்தில் உள்ள பாலத்துக்கு அடியில் 30 வயதுக்குட்பட்ட பெண்ணின் சடலம் சிதைக்கப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளது. தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்திலிருந்து 45 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது ரங்காரெட்டி மாவட்டம். இங்குள்ள செவெல்லா பாலத்துக்கு அடியில் முகம் சிதைக்கப்பட்ட நிலையில் பெண் ஒருவரின் சடலம் இருப்பதாக செவெல்லா காவல் நிலையத்துக்கு தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து, சம்பவ இடத்துக்கு விரைந்த போலீசார் பெண்ணின் சடலத்தை பார்த்து அதிர்ச்சியடைந்தனர். அப்போது கொலை செய்யப்பட்டுள்ள பெண்ணின் உடலில் ஆடைகள் கலைக்கப்பட்டு, பாறை கற்களால் முகம் சிதைக்கப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது.

இதையடுத்து போலீசார் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனை செய்ய ரங்காரெட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இதுகுறித்து வழக்கு பதிவு செய்துள்ள காவல் ஆய்வாளர் பாலகிருஷ்ணா, கொலை செய்யப்பட்ட பெண்ணுக்கு 20 வயது முதல் 30 வரை இருக்கும். அவர் கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டு இருக்கலாம். அடையாளம் தெரியாதவாறு முகம் சிதைக்கப்பட்டுள்ளது. பிரேத பரிசோதனைக்கு பிறகே முழு விவரம் தெரிய வரும் என கூறியுள்ளார். இச்சம்பவம் குறித்து பேசிய செவேல்லா பகுதி ஏசிபி பி.ரவீந்தர் ரெட்டி, இந்தக் கொலை வேறு இடத்தில் நடந்திருக்கலாம் என்றும் அவரது உடல் பின்னர் இங்கு கொண்டு வந்து போடப்பட்டிருக்கலாம் என்றும் நாங்கள் சந்தேகிக்கிறோம். இதனைப் பற்றி விசாரிக்க நான்கு படைகள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும் விசாரணை நடந்து வருகிறது என்றார். கொலை நடந்த இந்தப் பகுதியை சுற்றியுள்ள சி.சி.டி.வி கேமராக்களை சோதனை செய்வதுடன், ஹைதராபாத் மற்றும் அதைச் சுற்றியுள்ள மாவட்டங்களில் உள்ள அனைத்து காவல் நிலையங்களுக்கும் காணாமல் போனவர் குறித்த வழக்கு விபரங்களை தெரிவிக்கும்படி காவல்துறையினருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது, என கூறியுள்ளார்.


Tags : Terrorist murders ,Telangana ,murders , Telangana, Ranga, girl, found dead
× RELATED காதலனை திருமணம் செய்து கொண்டதால்...