×

முகக்கவசம், கிருமிநாசினிகள் அதிக விலைக்கு விற்பனை செய்வதை தடுக்க கோரிய மனு: தமிழக அரசு பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவு!

சென்னை: கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க தேவையான முகக்கவசம் மற்றும் கிருமி நாசினிகள் அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுவதை தடுக்க நடவடிக்கை எடுக்ககோரிய மனு மீது தமிழக அரசு பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸிலிருந்து மக்களை பாதுகாக்கும் வகையில் முகக்கவசங்கள், கிருமி நாசினி திரவங்களை அத்தியாவசிய பொருட்களாக அறிவித்து மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த பொருட்கள் போதுமான அளவு கிடைப்பதை உறுதி செய்யும் வகையில், அவற்றை பதுக்கி வைக்கப்படுவதையும், அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுவதையும் தடுத்து நடவடிக்கை எடுக்க அனைத்து மாநில அரசுகளுக்கும், யூனியன் பிரதேச அரசுகளுக்கும் மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. இதன் அடிப்படையில் பிற மாநில அரசுகள் உத்தரவு பிறப்பித்த போதும்,  தமிழக அரசு எந்தவித நவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறி சென்னையை சேர்ந்த வழக்கறிஞர் ராஜேஷ் என்பவர் உயர்நீதிமன்றத்தில் ஒரு பொதுநல வழக்கு ஒன்றினை தாக்கல் செய்தார்.

அந்த மனுவில் அத்தியாவசிய பொருட்களாக அறிவிக்கப்பட்டுள்ள முகக்கவசம் மற்றும் கிருமி நாசினிகளை பதுக்கி, அதிக விலைக்கு விற்பனை செய்வது 7 ஆண்டுகள் தண்டனைக்குரிய குற்றமாகும். மேலும் சென்னையில், முகக்கவசம், கிருமி நாசினிகள் கிடைக்காத நிலையில் உள்ளதால் மாநில அரசு எடுத்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் பயனளிக்காமல் உள்ளதாகவும் அவர் மனுவில் தெரிவித்துள்ளார். தொடர்ந்து, மத்திய அரசின் அறிவிப்பை ஏற்று தமிழக அரசு தகுந்த உத்தரவுகளை பிறப்பிக்க வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டிருந்தார். இந்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்ற நீதிபதிகள், எம்.சுந்தரேஷ் மற்றும் கிருஷ்ணன் ராமசாமி ஆகியோர் அடங்கிய அமர்வு வழக்கு தொடர்பாக தமிழக அரசு மார்ச் 20ம் தேதிக்குள் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையை நாளைக்கு ஒத்திவைத்துள்ளனர்.



Tags : Tamil Nadu , Face cover, disinfectant, high price, sale, petition, Government of Tamil Nadu
× RELATED தமிழ்நாட்டில் ஏப். 13-ம் தேதி முதல்...