×

திருட்டு புகாரில் போலீஸ் விசாரணைக்கு அழைத்ததால் பரிதாபம்: நெல்லை அருகே மகளை கொன்று தாய் தற்கொலை

ஆலங்குளம்: நெல்லை அருகே சீதபற்பநல்லூரை அடுத்த வல்லவன்கோட்டை புளிய மரத் தெருவைச் சேர்ந்தவர் திருமலைக்குமார். இவரது மனைவி வள்ளியம்மாள் (33). இவர்களுக்கு மகராசி (8), கனகலட்சுமி (6) என்ற 2 மகள்கள் உள்ளனர். கணவர் திருமலைக்குமார் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு நிகழ்ந்த விபத்தில் இறந்து விட்டார். இதனால் வள்ளியம்மாள் கூலி வேலை பார்த்து 2 பெண் குழந்தைகளையும் பராமரித்து வந்தார். இவர்களது பக்கத்து வீட்டைச் சேர்ந்தவர் சுரேஷ்குமார் மனைவி ஆவுடைதங்கம். இவரது வீட்டில் கடந்த 10 நாட்களுக்கு முன்பு நகை திருட்டு போனது. இதுகுறித்து ஆவுடைதங்கம், வள்ளியம்மாள் மீது சந்தேகம் இருப்பதாக சீதபற்பநல்லூர் போலீசில் புகார் செய்தார். போலீசார் நேற்று முன்தினம் வள்ளியம்மாளை அழைத்து இது தொடர்பாக விசாரித்ததாக தெரிகிறது. இதனால் மனமுடைந்த அவர், வீட்டுக்கு வந்தவுடன் ஆவுடைதங்கத்திடம் ‘என் மீது எப்படி போலீசில் புகார் செய்யலாம்’ என்று கேட்டார். இதுதொடர்பாக அவர்களுக்குள் வாய்த் தகராறு ஏற்பட்டது.

போலீஸ் விசாரணைக்கு அழைத்துச் சென்றதால் மனவேதனையடைந்த வள்ளியம்மாள் நேற்று அதிகாலை 2 மணியளவில் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த தனது குழந்தைகளை எழுப்பினார். பின்னர் தான் தயாராக வைத்திருந்த விஷத்தை மகராசியின் வாயில் ஊற்றி குடிக்க வைத்தார். அதன் பிறகு தானும் குடித்தார். மீதமுள்ள விஷத்தை கனகலட்சுமியின் வாயில் ஊற்ற முயன்றார். அப்போது தூக்க கலக்கத்தில் இருந்ததால் சிறுமியின் கைபட்டு, விஷம் தரையில் கொட்டியது.
நள்ளிரவில் இவர்கள் வீட்டில் பேச்சு சத்தம் கேட்டதால் சந்தேகம் அடைந்த அக்கம், பக்கத்தினர் அங்கு சென்று பார்த்தனர். அப்போது வள்ளியம்மாள், மகராசி ஆகியோர் வாயில் நுரை தள்ளிய நிலையில் மயங்கிக் கிடந்தனர். அருகில் 6 வயது குழந்தை கனகலட்சுமி அழுது கொண்டிருந்தாள்.

இதனால் பதறித் துடித்த அவர்கள், இருவரையும் மீட்டு நெல்லை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் வரும் வழியிலேயே மகராசி இறந்தார். சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்ட வள்ளியம்மாளும் சிறிது நேரத்தில் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து சீதபற்பநல்லூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். திருட்டு புகாரில் போலீசார் விசாரணைக்கு அழைத்ததால் மனமுடைந்து மகளுக்கு விஷம் கொடுத்து கொன்று தாய் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சீதபற்பநல்லூர் பகுதியில் தீராத சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தாய், தந்தையை இழந்து தவிக்கும் குழந்தை

குழந்தைகள் இருவரையும் தூங்க வைத்து விட்டு நேற்று முன்தினம் இரவு வள்ளியம்மாள் மட்டும் விழித்திருந்தார். தான் மீது திருட்டு குற்றம் சுமத்தி போலீசில் புகார் செய்ததால் மிகுந்த மனவேதனையில் இருந்தாராம். இதனால் குழந்தைகள் இருவருக்கும் விஷம் கொடுத்து கொன்று விட்டு தானும் தற்கொலை செய்ய வள்ளியம்மாள் முடிவு செய்தார். அதன்படி மகராசிக்கு விஷத்தை வாயில் ஊற்றி விட்டு கனகலட்சுமிக்கும் கொடுக்க முயன்றார். ஆனால் கனகலட்சுமி தூக்க கலக்கத்தில் இருந்ததால் கைபட்டு விஷம் தரையில் கொட்டியது. இதனால் அவள், அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். தந்தை ஏற்கனவே விபத்தில் இறந்த நிலையில் தற்போது தாயின் முடிவால் 6 வயது குழந்தை கனகலட்சுமி பெற்றோரை இழந்து ஆதரவற்ற நிலையில் உள்ளார்.

Tags : paddy Suicide , Suicide
× RELATED பிரபல நகைக்கடையில் 28.50 கிலோ தங்க காசு...