கேள்வி நேரத்தின்போது திருவாடனை உறுப்பினர் கருணாஸ் பேசினார். அவர் பேச்சை தொடங்கும் முன்பு, கச்சத்தீவு தொடர்பாக பேச தொடங்கினார். இதற்கு திமுக உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால், அவையில் கடும் கூச்சல், குழப்பம் ஏற்பட்டது. இந்த நிலையில் கர்ணாஸ்க்கு ஆதரவாக அதிமுக அமைச்சர்கள், எம்எல்ஏக்களும் எழுந்து நின்று கோஷம் எழுப்பினார்கள். இதனால், அவையில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதை தொடர்ந்து சபாநாயகர் தனபால், “உறுப்பினர்கள் அமர வேண்டும். கேள்வி நேரத்தின்போது தலைவர்கள் பற்றி பேச அனுமதிக்கிறோம். அதற்கு உறுப்பினர்கள் தெரிவித்தால் என்னை பார்த்து தான் உறுப்பினர்கள் பேச வேண்டும். நேரடியாக அவர்களிடம் பேசுவது முறையல்ல. நேரடியாக கேள்விக்கு வாருங்கள். உறுப்பினர் பொதுவாக தான் பேசினார்.
உரிய அறிவுரை வழங்கியுள்ளேன். ( அப்போதும் அவையில் கூச்சல், குழப்பம் நீடித்தது) தங்கம் தென்னரசு (திமுக): கேள்வி நேரத்தில் யாரை குறிப்பிட்டும் குற்றச்சாட்டுகளை கூறமுடியாது. உறுப்பினர் கருணாஸ் திமுக பற்றி கூறியிருக்கிறார் அதை அவை குறிப்பில் இருந்து நீக்க வேண்டும். அவை முன்னவர் ஓ.பன்னீர் செல்வம்: கேள்வி நேரத்தின் போது உறுப்பினர்கள் கேள்வி மட்டுமே கேட்க வேண்டும். கேள்வி கேட்காமல் வேறு பேச்சுக்கு போவதால் கால விரயம் தான் ஏற்படுகிறது. ஆளும் கட்சி உறுப்பினர்களாக இருந்தாலும் சரி, எதிர்க்கட்சி உறுப்பினர்களாக இருந்தாலும் சரி கேள்வி மட்டுமே கேட்க வேண்டும். அமைச்சர்கள் அவர்களுக்கு பதில் அளிப்பார்கள். இதை அனைவரும் கேட்க வேண்டும். உறுப்பினர் கருணாஸ் பேசியதை அவை குறிப்பில் இருந்து நீக்க வேண்டும். சபாநாயகர் தனபால்: கருணாஸ் பேசியது அவை குறிப்பில் இருந்து நீக்கப்படுவதாக அறிவித்தார். கருணாஸின் பேச்சால் பேரவை சுமார் 15 நிமிடங்களுக்கு மேலாக கடும் கூச்சல் குழப்பம் ஏற்பட்டுள்ளது. கருணாஸ் பேச்சு அவை குறிப்பில் நீக்கப்பட்ட பிறகே அவையில் அமைதி நிலவியது.