×

கீழ்ப்பாக்கம், திருவொற்றியூர் பகுதிகளில் தொழில் உரிமம் இல்லாத 28 கடைகளுக்கு சீல்: மாநகராட்சி நடவடிக்கை

அண்ணாநகர்: கீழ்ப்பாக்கத்தில் உரிமம் இன்றி இயங்கி வந்த 8 கடைகளுக்கு மாநகராட்சி அதிகாரிகள் நேற்று சீல் வைத்தனர். சென்னை மாநகராட்சியில் ஏராளமான வணிக நிறுவனங்கள், கடைகள், உணவகங்கள் மற்றும் சிறு, குறு நிறுவனங்கள் செல்பட்டு வருகின்றன. இவற்றில் பல கடைகள், வணிக நிறுவனங்கள் முறையாக தொழில் உரிமம் மற்றும் தொழில் வரி செலுத்தாததால் மாநகராட்சிக்கு பல லட்சம் ரூபாய் வருவாய் இழப்பு ஏற்பட்டு வருகிறது. இதையடுத்து, மண்டலம் வாரியாக மாநகராட்சி அதிகாரிகள் ஆய்வு நடத்தி, தொழில் உரிமம் மற்றும் தொழில் வரி செலுத்தாத நிறுவனங்கள் மற்றும் கடைகள் மீது நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

அதன்படி கடந்த வாரம் அயனாவரம், கொளத்தூர் பெரவள்ளூர், செம்பியம் ஆகிய பகுதிகளில் உரிமம் இல்லாமல் நடத்தப்பட்ட 22 கடைகளுக்கு மாநகராட்சி அதிகாரிகள் சீல் வைத்தனர். அதை தொடர்ந்து, மாதவரம் மண்டலத்திற்கு உட்பட்ட பகுதிகளில் உரிமம் இன்றி இயங்கிய 19 கடைகளுக்கு மாநகராட்சி அதிகாரிகள் சீல் வைத்தனர். கடந்த 2 நாட்களுக்கு முன், ஆலந்தூர் மண்டலம் 163வது வார்டுக்கு உட்பட்ட ஆதம்பாக்கம் கர்ணிகர் தெருவில் உரிமமின்றி இயங்கிய 10 கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டது.

இந்நிலையில், கீழ்ப்பாக்கம் ஆர்மஸ் சாலையில் உள்ள கடைகளில் மாநகராட்சி அதிகாரிகள் ஆய்வு செய்தபோது, சில கடைகள் உரிமம் இன்றி இயங்குவது தெரிந்தது. சம்பந்தப்பட்ட கடை உரிமையாளர்களிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் வழங்கியும், உரிய விளக்கம் அளிக்கவில்லை என கூறப்படுகிறது.  இதையடுத்து, 8வது மண்டல அதிகாரி தலைமையில் உதவி வருவாய் துறை அதிகாரி ஜோசப், உரிமம் ஆய்வாளர் திருநாவுக்கரசு தலைமையிலான அதிகாரிகள், ஊழியர்கள் நேற்று சம்பவ இடத்துக்கு வந்து, உரிமம் இல்லாமல் இயங்கிய துணிக்கடை உள்ளிட்ட 8 கடைகளுக்கு சீல் வைத்தனர். அசம்பாவிதங்களை தவிர்க்க போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

* திருவொற்றியூர் மண்டலத்திற்கு உட்பட்ட எர்ணாவூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் தொழில் உரிமம் பெறாமலும், புதுப்பிக்காமலும் கடைகள் செயல்படுவதாக திருவொற்றியூர் மண்டல உதவி வருவாய் அலுவலர்களுக்கு புகார்கள் வந்தன. அதன்பேரில், உதவி வருவாய் அலுவலர்கள் முருகபாலாஜி, பாக்கியம் செல்வராஜ், வரி மதிப்பீட்டாளர் பிரபு ஆகியோர் நேற்று எர்ணாவூர் பகுதியில் உள்ள கடைகளில் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது தொழில் உரிமம் இல்லாமலும், தொழில் வரி செலுத்தாமலும் 20 கடைகள் செயல்படுவது தெரிந்தது.  அந்த கடைகளுக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர்.

Tags : shops ,Thiruvottiyur: Corporation ,Kilpauk , Subsidy, Thiruvottiyur, Business License, 28 Shop, Seal, Corporation
× RELATED ஒரத்தநாடு கடை தெருவில் 5 கடைகளில் பூட்டை உடைத்து கொள்ளை முயற்சி