×

சொக்கிகுளம் முதல் ஊமச்சிகுளம் வரையிலான 7.5 கி.மீ நீளம் பறக்கும் பாலம் தேர்தலுக்கு முன் திறப்பா?: வேகமெடுக்கும் பணிகள்

மதுரை: சொக்கிகுளம் முதல் ஊமச்சிகுளம் வரையிலான 7.5 கி.மீ நீளமுடைய பறக்கும் பாலம் கட்டுமானப்பணியை விரைவுபடுத்தி சட்டப்பேரவை தேர்தலுக்கு முன் திறக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக பாலத்தில் இருந்து மாட்டுத்தாவணி நோக்கிய பாதை அமைக்க அழகர்கோவில் சாலையின் இருபக்கமும் பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன.
மதுரையில் இருந்து நத்தம் வரை 35 கி.மீ சாலையை தேசிய நெடுஞ்சாலை ஆணையம் ஏற்று ரூ. 1028 கோடியில் நான்கு வழிச்சாலையாக விரிவாக்கம் செய்யும் திட்டப்பணி கடந்த 2018ம் ஆண்டு செப்டம்பரில் துவங்கியது. இதில் மதுரை சொக்கிகுளம் முதல் ஊமச்சிகுளம் வரை 7.5 கி.மீ தூரம் ரூ. 612 கோடியில் பறக்கும் பாலம் கட்டப்படுகிறது. ரூ. 416 கோடியில் ஊமச்சிகுளம் முதல் நத்தம் வரை 28 கி.மீ. தூரம் நான்குவழிச்சாலையாக விரிவாக்கம் செய்யப்படுகிறது. இதில் சாலை விரிவாக்கப்பணி பெரும் பகுதி முடிந்துள்ளது.

பறக்கும் பாலத்திற்காக மொத்தம் 225 தூண்கள் அமைக்கும் பணி 80 சதவீதம் முடிந்துள்ளது. சாலை நெடுகிலும் ஒற்றை தூண்கள் கட்டி, அதில் ரெடிமேட் காங்ரீட் தளம் மூலம் இணைக்கப்பட்டு வருகின்றன. நாராயணபுரத்தில் பாலத்தின் மீது வாகனங்கள் ஏறி இறங்கும் வகையில் இரட்டை தூண்கள் அமைகின்றன. கட்டுமானப் பணி துவங்கி 18 மாதங்களாகிறது. 2021ம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தல் நெருங்குவதால், அதற்குள் பாலத்தை திறக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. எனவே, பாலத்தை விரைவாக கட்டி முடிக்க தேசிய நெடுஞ்சாலை ஆணையம் உத்தரவிட்டுள்ளது. எனவே சொக்கிகுளத்தில் இருந்து அழகர்கோவில் சாலை வழியாக மாட்டுத்தாவணி பஸ்ஸ்டாண்ட் செல்லும் வகையில் பாலத்தில் பாதை அமைக்கப்படுகிறது. இந்த பாதை அமைக்கும் பணியில் தற்போது மாநகராட்சி அலுவலகம் முன் தூண்கள் எழுப்ப தோண்டும் பணி துவங்கி உள்ளது. இதற்காக அங்குள்ள பெரியார், அம்பேத்கர், பிடிஆர்.பழனிவேல்தியாகராஜன் ஆகியோரின் சிலைகளை அகற்றாமல், நவீன தொழில் நுட்பத்தை பயன்படுத்தி கட்டுமானப்பணி நடைபெறுகிறது.
அடுத்து, அழகர்கோவில் சாலையில் ஏறி இறங்க வசதியாக தல்லாகுளம் பெருமாள் கோவில் வரை பாதை அமைக்கப்பட உள்ளது.

தூண்கள் இணைக்கும் பணி ஒரே நேரத்தில் 3 இடங்களில் நடைபெற்று வருகிறது. சொக்கிகுளத்தில் ஆரம்பித்த இணைப்பு பணி ஆயுதப்படை மாரியம்மன் கோயில் வரை எட்டி பிரமாண்ட தோற்றத்துடன் காட்சி அளிக்கிறது. இதே போல் நாராயணபுரம், ஊமச்சிகுளத்திலும் இணைப்பு பணிகள் நடைபெறுகின்றன. மொத்தமுள்ள 225 தூண்களில் 100க்கும் மேற்பட்ட தூண்கள் இணைக்கப்பட்டுள்ளன.இதுகுறித்து தேசிய நெடுஞ்சாலை ஆணைய பொறியாளர் ஒருவர் கூறுகையில், `` இன்னும் 10 மாதங்களில் பாலம் கட்டும் பணி நிறைவடையும் என எதிர்பார்க்கிறோம்” என்றார்.

நூறு நிமிடங்களில் திருச்சிக்கு செல்லலாம்
தேசிய நெடுஞ்சாலை ஆணைய பொறியாளர் ஒருவர் கூறுகையில் `` இது தமிழகத்தின் நீண்ட பறக்கும் பாலமாகும். ஊமச்சிகுளத்தில் பறக்கும் பாலத்தில் இருந்து இறங்கியதும், புதிதாக அமைக்கப்படும் நான்கு வழிச்சாலை வழியாக கொட்டாம்பட்டி சென்று திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் இணைகிறது. எனவே, பறக்கும் பாலம் வழியாக செல்லும்போது மதுரையில் இருந்து திருச்சிக்கு 23 கி.மீ. பயண தூரமும், நேரமும் குறையும். மதுரை ரிங்ரோட்டில் இருந்து திருச்சி செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் வாகன போக்குவரத்தை குறைக்க வாய்ப்பு ஏற்படும். புதிய பாலம் தொலைநோக்கு திட்டமாகும். மதுரையில் இருந்து திருச்சிக்கு இந்த பாலத்தின் மூலம் 100 நிமிடங்களில் சென்றடைய முடியும்’’ என்றார்.

Tags : election , 7.5km long bridge,Sokkikulam ,Oumachikulam , opened before ,elections?
× RELATED நாடாளுமன்ற தேர்தல் பணியில் ஈடுபடும் போலீசார் தபால் வாக்கு செலுத்தினர்