×

கொரோனா பரவுவதை தடுக்க தமிழக அரசு கடும் நடவடிக்கை பள்ளி, கல்லூரிக்கு 31 வரை விடுமுறை: தியேட்டர், வணிக வளாகம், டாஸ்மாக் பார், கிளப்கள் மூடப்படும்

* ஜிம், நீச்சல் குளம், விளையாட்டு அரங்குகள் இயங்க தடை
* கூட்டம், கண்காட்சி, மாநாடு, பயிற்சி முகாம் நடத்தக்கூடாது
* சமூக வலைதளங்களில் வதந்தி பரப்பினால் கடும் நடவடிக்கை

சென்னை: கொரோனா வைரஸ் பீதி காரணமாக, தமிழகத்தில் பள்ளி, கல்லூரிகள் இன்று முதல் 31ம் தேதி வரை விடுமுறை விடப்படுவதாக தமிழக முதல்வர் எடப்பாடி அறிவித்துள்ளார். மேலும், தியேட்டர், மால், திருமண மண்டபங்கள், வணிக வளாகங்கள், பார், விளையாட்டரங்கம், கிளப்புகளை உடனடியாக மூட வேண்டும் என்றும் முதல்வர் கூறியுள்ளார். உலகம் முழுவதும் 100க்கும் மேற்பட்ட நாடுகளில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. இந்தியாவிலும் இந்த வைரசுக்கு 113 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், இந்தியா முழுவதும் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. ஆனாலும் 2 பேர் இந்நோயால் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இதனால் பள்ளி, கல்லூரி, பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்கள், தியேட்டர்கள் மூடப்பட்டு வருகிறது.

அதன்படி தமிழகத்திலும் கொரோனா வைரஸ் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. விமான நிலையம், ரயில் நிலையம் மற்றும் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் தமிழக சுகாதாரத் துறை அதிகாரிகள் மூலம் கொரோனா வைரஸ் குறித்து விழிப்புணர்வு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. தமிழகத்தில் காஞ்சிபுரத்தை சேர்ந்த ஒருவருக்கு மட்டுமே இதுவரை கொரோனா வைரஸ் பாதிப்பு இருந்தது. தற்போது அவரும் குணமடைந்துள்ளார். இதன்மூலம் தமிழகத்தில் தற்போது ஒருவருக்கு கூட கொரோனா வைரஸ் இல்லை என்ற நிலை ஏற்பட்டுள்ளது. இருந்தாலும் உலக சுகாதார நிறுவனம் அறிவுறுத்தலின்படி, தமிழகத்தில் பல்வேறு விழிப்புணர்வு பணிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நேற்று சட்டப்பேரவை கூட்டம் முடிந்ததும், முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் மூத்த அமைச்சர்கள், சுகாதார துறை அதிகாரிகள் உள்ளிட்ட பல்வேறு துறை செயலாளர்களுடன் முதல்வர் அவசர ஆலோசனை நடத்தினார்.

இந்த ஆலோசனைக்கு பிறகு முதல்வர் எடப்பாடி வெளியிட்டுள்ள அறிக்கை: மத்திய அரசு, கொரோனா வைரஸ் நோய் தொற்றை ஒரு பேரிடராக அறிவிக்கை செய்துள்ள நிலையில், இது தொடர்பாக தமிழக அரசு, “வருமுன் காப்போம்” என்ற முதுமொழிக்கு ஏற்ப, பல்வேறு தொடர் பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுத்துள்ளது. அதன்படி,

* வெளிநாடுகளில் இருந்து இந்தியர்கள் தமிழகம் திரும்பும் சூழ்நிலை ஏற்பட்டால், தேவைக்கேற்ப அவர்களை உலக சுகாதார நிறுவனத்தின் வழிமுறைகளின்படி, 14 நாட்கள் தனிமைப்படுத்தி கண்காணிக்க தேவையான வசதிகளை
இயன்றவரை அந்தந்த விமான நிலையங்களின் அருகிலேயே ஏற்படுத்தப்படும்.
* தமிழ்நாட்டில் உள்ள அனைத்து விமான நிலையங்களிலும், உள்நாட்டு பயணிகளையும் தொடர் கண்காணிப்புக்கு உட்படுத்தி, சோதனை செய்யப்படும்.
* அண்டை மாநிலங்களில் இருந்து  கொரோனா நோய் நமது மாநிலத்தில் பரவாமல் கட்டுப்படுத்துவதற்கு, உடனடியாக எல்லையோர மாவட்டங்களில் உள்ள கண்காணிப்பு சோதனை சாவடிகளில், நோய் கண்காணிப்பு பணிகள் மற்றும் தூய்மைப்படுத்தும் பணிகளை போர்க்கால அடிப்படையில் ஒருங்கிணைந்து மேற்கொள்ள வருவாய் துறை, காவல் துறை, போக்குவரத்து துறை மற்றும் சுகாதார துறை அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
* தமிழ்நாட்டில் இருந்து அண்டை மாநிலங்களுக்கு தனியார் பேருந்துகள் வாயிலாக லட்சக்கணக்கானவர்கள் பயணிப்பதை கருத்தில் கொண்டு, அண்டை மாநில எல்லையை ஒட்டி உள்ள சுங்கச்சாவடி அருகிலேயே பயணிகளின் உடல்நிலையை தெர்மல் ஸ்கேனர் மூலம் பரிசோதனை செய்யப்படுவார்கள்.
* தனியார் மற்றும் அரசு பேருந்துகள், மெட்ரோ ரயில், ரயில்வே, மாநகர பேருந்துகள், பேருந்து நிலையங்கள், பேருந்து நிறுத்தங்கள், மெட்ரோ ரயில் நிலையங்கள், பொது கழிவறைகள் போன்ற இடங்களில் பொது சுகாதாரத் துறையினர், போக்குவரத்துத் துறையினர் மற்றும் உள்ளாட்சி அமைப்புகள் இணைந்து பேருந்துகளையும், மெட்ரோ ரயில்களையும், தினந்தோறும் கிருமிநாசினி மூலம் தூய்மைப்படுத்தவும், கூடுதல் சுகாதார நடவடிக்கைகளையும், கொரோனா வைரஸ் நோய் தடுப்பு நடவடிக்கைகளையும் தவறாமல் மேற்கொள்ள வேண்டும்.
* அனைத்து ரயில் நிலையங்களிலும், தெர்மல் ஸ்கேனர் மூலம் பயணிகளின் உடல் வெப்ப நிலையை கண்டறிந்து நடவடிக்கை எடுக்கப்படும். அனைத்து ரயில் நிலையங்களையும், ரயில் பெட்டிகளையும் தொடர்ந்து கிருமிநாசினி மூலம் தினந்தோறும் சுத்தம் செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது.
* மக்கள் அதிகம் கூடும் இடங்களில் கிருமிநாசினி கொண்டு தூய்மைப்படுத்தும் பணிகளை உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் சுகாதாரத் துறை தீவிரமாக மேற்கொள்ள வேண்டும்.  
* ஒருங்கிணைந்த குளிர்சாதன வசதி உள்ள இடங்களில் அவற்றை வாரம் ஒருமுறையாவது கிருமிநாசினி கொண்டு முழுமையாக சுத்தம் செய்ய வேண்டும்.
*  தலைமை செயலகத்திற்கு வருவதை பொதுமக்கள் தவிர்க்க வேண்டும்.
* மாநிலத்தில் செயல்படும் அனைத்து அரசு, மாநகராட்சி மற்றும் தனியார் பள்ளிகள், கல்லூரிகள்,  பல்கலைக்கழகங்கள், பயிற்சி மையங்கள் உள்ளிட்ட அனைத்து கல்வி நிறுவனங்களும் 31.3.2020 வரை மூட உத்தரவிடப்பட்டுள்ளது. அரசு தேர்வுகள் (10 முதல் 12ம் வகுப்பு வரை மற்றும் கல்லூரி தேர்வுகள் - செய்முறை தேர்வுகள் மற்றும் நுழைவு தேர்வுகள் திட்டமிட்டபடி நடைபெறும். தேர்வுகள் முடிவடையும் வரை தேர்வு எழுதும் மாணவர்களுக்காக மட்டும் விடுதிகள் மற்றும் உறைவிட பள்ளிகள் தொடர்ந்து இயங்கும்.  
* மருத்துவம் மற்றும் மருத்துவம் சார்ந்த கல்லூரிகள் தொடர்ந்து இயங்கும்.
* அங்கன்வாடி மையங்கள் அனைத்தும் 31.3.2020 வரை மூடப்படும். இந்த மையங்களில் உணவருந்தும் குழந்தைகளுக்கு 15 நாட்களுக்கான உணவு பொருட்களை அந்தந்த குடும்பத்திடம் அங்கன்வாடி மைய அமைப்பாளர்கள் வழங்குவார்கள்.  
* மாநிலத்தில் செயல்படும் அனைத்து திரையரங்குகள், மக்கள் அதிகம் கூடும் வணிக வளாகங்கள், கேளிக்கை அரங்கங்கள், நீச்சல் குளங்கள், உடற்பயிற்சி மையங்கள், உடற் பயிற்சி மைதானம்,  உயிரியல் பூங்காக்கள் மற்றும் அருங்காட்சியகங்கள் 31.3.2020 வரை மூடப்படும்.
* ஏற்கனவே திட்டமிடப்பட்ட நிகழ்வுகள் தவிர வேறு எந்த நிகழ்ச்சிகளும் திருமண மண்டபங்களில் நடத்தக்கூடாது. அவ்வாறு திட்டமிடப்பட்ட நிகழ்வுகளில் கூட குறைந்த அளவில் மக்கள் பங்கேற்க வேண்டும்.  
* திருவிழாக்கள், துக்க நிகழ்வுகள் உட்பட அனைத்து சமூக நிகழ்வுகளிலும், குறைந்த அளவில் மக்கள் கூடினால், கொரோனா வைரஸ் பரவுதல் பெரிய அளவில் தடுக்கப்படும் என சுகாதார வல்லுநர்கள் அறிவுறுத்துகின்றனர்.  அதனை கடைபிடிக்குமாறு பொதுமக்கள் அன்புடன் கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.
* அதிகமாக கூட்டம் கூடும் ஊர்வலங்கள், பொதுக்கூட்டங்கள், கோடை கால பயிற்சி வகுப்புகள், முகாம்கள், மாநாடுகள், கருத்தரங்குகள், வணிக கண்காட்சிகள், கலாச்சார நிகழ்வுகள், விளையாட்டு போட்டிகள் போன்ற நிகழ்வுகளை நடத்த 31.3.2020 வரை அனுமதி வழங்க கூடாது.
* அனைத்து விளையாட்டு அரங்குகள், கிளப்புகள், பார்கள் (டாஸ்மாக் பார்கள் உட்பட) கேளிக்கை விடுதிகள் போன்றவை 31.3.2020 வரை மூடப்பட வேண்டும்.
* மேற்கூறியவற்றை தவிர பிற அவசிய மற்றும் அத்தியாவசிய பணிகள் வழக்கம் போல் தொடர்ந்து நடைபெறும்.
* கொரோனா வைரஸ் நோயை கட்டுப்படுத்தும் மத்திய மக்கள் நல்வாழ்வு மற்றும் சுகாதார துறையின் வழிகாட்டு நெறிமுறைகளையும், மாநில அரசு வழங்கியுள்ள அறிவுரைகளையும் அனைத்து அரசு துறைகளும், பொது நிறுவனங்களும், தனியார் நிறுவனங்களும் தவறாது கடைபிடிக்க வேண்டும்.
«அனைத்து தொழிற்சாலைகள் மற்றும் நிறுவனங்களில், முழுமையாக கை கழுவுவதை பற்றியும், தடுப்பு நடவடிக்கைகள் பற்றியும், அங்கு பணிபுரியும் தொழிலாளர்களுக்கும், ஊழியர்களுக்கும் தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.  இதற்கு தேவையான சோப், கிருமிநாசினி, முகக்கவசம் ஆகியவற்றை போதிய அளவில் இருப்பில் வைத்து, பணிபுரியும் அனைவருக்கும் வழங்க வேண்டும்.
* அனைத்து மாவட்ட ஆட்சி தலைவர்கள், மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள், காவல் ஆணையாளர்கள், மாவட்ட பேரிடர் மேலாண்மை அதிகாரிகள் உள்ளிட்ட தொடர்புடைய அனைத்து அதிகாரிகள் மேற்கண்ட உத்தரவுகள் மற்றும் நடைமுறைகளை சிறிதும் தவறாது நடைமுறைப்படுத்தி, கொரோனா தொற்று நோய் மேலும் பரவாமல் தடுக்க தகுந்த நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்.
* கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளதாலும், சில தனியார் நிறுவனங்கள் வீட்டிலிருந்தே பணி செய்ய தங்கள் பணியாளர்களுக்கு அறிவுறுத்தியுள்ளதாலும், பொதுமக்கள் குடும்பத்துடன் சுற்றுலா செல்ல வாய்ப்பு இருப்பதாக தவறாக கருதி, வெளியில் சுற்றுலா செல்வதை தவிர்க்க வேண்டும்.  
* சுற்றுலாவை ஒருங்கிணைக்கும் தனியார் மற்றும் அரசு சுற்றுலா ஒருங்கிணைப்பாளர்கள் 31.3.2020 வரை புதிய சுற்றுலா எதையும் ஒருங்கிணைத்து, பொதுமக்களை சுற்றுலாவிற்கு அழைத்து செல்லக் கூடாது.
*  சுற்றுலா பயணியர் தங்குமிடம் அனைத்தும் 31.3.2020 வரை மூடப்பட வேண்டும்.
* கோயில்கள், தேவாலயங்கள், மசூதிகள் மற்றும் பிற வழிபாட்டு தலங்களில் கூட்டம் கூடுவதை தவிர்க்குமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றனர்.
* கொரோனா வைரஸ் காய்ச்சல் பற்றி பொய்யான செய்தியோ, வதந்தியோ அல்லது தேவையற்ற பீதியை செய்தியாகவோ, சமூக வலைதளத்திலோ அல்லது வேறு எந்த வடிவிலோ பரப்பினால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.
* பொதுமக்கள் மற்ற மாநிலங்களுக்கு பயணிப்பதையும், பொது இடங்களில் அதிக அளவில் மக்கள் கூடுவதையும் அடுத்த 15 நாட்களுக்கு தவிர்க்கவும்,
*  கூட்டம் நிறைந்த பொது இடங்களுக்கு வயதானவர்கள், நோய்வாய்ப்பட்டவர்கள், குழந்தைகள் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி குறைந்த நபர்கள் பயணம் செய்வதை தவிர்க்கவும்.
* மக்கள் அதிகம் கூடும் இடங்களுக்கு குறிப்பாக, வழிபாட்டு தலங்கள், கடற்கரை, வணிக மையங்கள் திருமணங்கள் மற்றும் இதர சமூக விழாக்கள், விருந்துகள் ஆகியவற்றை தவிர்க்கவும்.
* பொதுமக்கள் அனைவரும் வீட்டிற்குள் நுழையும் போதும், அவ்வப்போதும் கைகளை சோப்பு போட்டு சுத்தமாக கழுவுவதை உறுதி செய்யவும். கைகளை சுத்தம் செய்யாமல் முகத்தைத் தொட வேண்டாம்.
* பெற்றோர்கள் தங்கள் குழந்தைகள் விடுமுறை நாட்களின்போது குழுவாக விளையாடாதவாறு கண்காணிக்கவும். வீட்டிற்குள் நுழைந்தவுடனும், அவ்வப்போது கைகளை சோப்பு போட்டு சுத்தமாக கழுவுவதை உறுதி செய்யவும்.
* அனைத்து அரசு அலுவலகங்கள் வழக்கம் போல் இயங்கும்.  அரசு அலுவலகங்கள், தனியார் நிறுவனங்களுக்கு செல்பவர்கள் பாதுகாப்பு கருதி, தங்கள் கைகளை உரிய கிருமிநாசினியை கொண்டு தூய்மைபடுத்தி கொண்ட பின் செல்லுங்கள்.
* சளி, இருமல், காய்ச்சல் உள்ளவர்கள் அலுவலகம் செல்வதை தவிர்க்கவும், கொரோனா நோய் அறிகுறி உள்ளவர்கள் உடனடியாக அரசு மருத்துவமனையை அணுகி உரிய சோதனை மேற்கொண்டு சிகிச்சை எடுத்துக் கொள்ளவும்.
* நோய்க்கான அறிகுறி உள்ள பொதுமக்கள் உடனடியாக அரசு மருத்துவமனையை அணுக வேண்டும்.
* கொரோனா வைரஸ் சம்பந்தமாக தெரிந்து கொள்ள சுகாதார துறையின் 24 மணிநேர கட்டுப்பாட்டு அறை இயக்கப்படுகிறது. இதன் எண்கள் 104, 044-29510400, 044-29510500, 9444340496 மற்றும் 8754448477.
* அனைத்து உத்தரவுகளும் இன்று (17ம் தேதி) முதல் நடைமுறைக்கு வரும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

கவர்னர் மாளிகை சுற்றுலாவுக்கு தடை
சென்னை கிண்டியில் கவர்னர் மாளிகை உள்ளது. இங்கு வார இறுதி நாட்களில் பொதுமக்கள் பார்வையிட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. முன் கூட்டியே பதிவு செய்தவர்களுக்கு கவர்னர் மாளிகையை சுற்றிப் பார்க்க அனுமதிக்கப்படுகிறது. ஆனால் தற்போது கொரோனா வைரஸ் பீதியால், கவர்னர் மாளிகைக்கு சுற்றுலா செல்ல வருகிற 31ம் தேதி வரை தடை விதிக்கப்படுவதாக கவர்னர் மாளிகை வட்டாரங்கள் தெரிவித்தன.

வீட்டு கண்காணிப்பில் உள்ளவர்கள் ஒரே நாளில் 248 அதிகரிப்பு: நேற்று வரை 2221 பேர் வீடுகளில் தனிமைபடுத்தப்பட்டு தொடர் மருத்துவ கண்காணிப்புக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.
* 1973 பேர் பயணிகள் விடுதிகளில் தனிமைபடுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டனர்.
* நேற்று ஒரே நாளில் இந்த எண்ணிக்கை 248 அதிகரித்து 2221 பேர் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிப்பட்டு வருகின்றனர்.
* மேலும் 22 பேர் மருத்துவமனைகளில் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.
* 96 பேரிடம் ரத்த பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு, 75 பேருக்கு பாதிப்பில்லை என தெரிய வந்துள்ளது.
* கொரோனா பாதிக்கப்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் காஞ்சிபுரத்தை சேர்ந்த நபர் குணமடைந்தவர் இன்று வீடு திரும்புவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

டிஎம்எஸ் வளாகத்தில் அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன்  காணொளி கட்சி மூலம் ஆலோசனை நடத்திய பின்னர் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கூறுகையில், “16 மாவட்டங்களில் உள்ள காவல்துறை உதவியுடன் கேரளாவில் இருந்து வருகின்ற அனைவரையும் சோதனை செய்யப்படுகின்றனர். பொது இடத்தில் இருந்து வீடு திரும்பும் போது கைகளை கழுவ வேண்டும். அண்டை மாநிலங்களுக்கு பயணத்தை தவிர்க்க வேண்டும். 70 வயதிற்கு மேற்பட்டவர்கள், நோய் எதிர்ப்பு சக்தி குறைந்தவர்கள் வீட்டைவிட்டு வெளியே செல்வதை தவிர்க்க வேண்டும்” என்றார்.

‘பள்ளிகளை திறந்தால் நிரந்தரமாக சீல்’
அரசு உத்தரவை மீறி பள்ளிகள், வணிக வளாகங்கள் திறந்தால் நிரந்தரமாக மூடி சீல் வைக்கப்படும் என்று மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் எச்சரித்துள்ளார். அரசு உத்தரவை மீறி பள்ளி, கல்லூரிகள், வணிகவளாகங்கள், திரையரங்குகள் உள்ளிட்ட அரசு மூட வேண்டும் என்று அறிவித்துள்ள இடங்களை திறந்து வைத்தால் நிரந்தரமாக மூடி சீல் வைக்கப்படும் என்று மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.


Tags : government ,Corona Corona School ,Tamil Nadu ,spread ,holidays ,clubs ,theater , Corona, Government of Tamil Nadu, School, College, Holidays, Theater, Shopping Complex, Task Bar, Clubs
× RELATED தொழில்முனைவோர் மேம்பாட்டு நிறுவனம்...