ஜோலார்பேட்டை: ஜோலார்பேட்டையில் பட்டப்பகலில் அமைச்சர் கே.சி.வீரமணியின் அண்ணன் பீடி கம்பெனியில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டது. திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டை அடுத்த சின்னகோடியூர் பகுதியில் அமைச்சர் கே.சி.வீரமணியின், அண்ணன் கே.சி.அழகிரிக்கு சொந்தமான பீடி கம்பெனி உள்ளது. இந்த கம்பெனிக்கு நேற்று மதியம் 12 மணியளவில் முகத்தை மூடியபடி வந்த மர்ம நபர் ஒருவர் திடீரென பெட்ரோல் குண்டு வீசியுள்ளார். இதில் பீடி கம்பெனி மளமளவென தீப்பிடித்து எரிந்தது. அங்கு மாற்றுத்திறனாளி உட்பட ஒரு சிலர் இருந்தனர்.
அவர்கள் அலறிஅடித்து ஓடி உயிர் தப்பினர். சத்தம் கேட்ட அக்கம் பக்கத்தினர் வந்து மர்ம நபரை பிடிக்க முயன்றபோது அவர் காரில் ஏறி தப்பினார். தீவிபத்தில் பீடி இலைகள் மற்றும் லேபிள்கள் எரிந்து சாம்பலானது. இதுபற்றி தீயணைப்பு துறைக்கு தகவல் ஏதும் தெரிவிக்கவில்லை என கூறப்படுகிறது. இந்நிலையில் தகவல் அறிந்து வந்த போலீசார் காரின் பதிவு எண்ணை கொண்டு விசாரித்தபோது அந்த கார் கிருஷ்ணகிரி சென்றதும், பின்னர், பெங்களூரு சென்று அங்கிருந்து சென்னைக்கு சென்றதாகவும் போலீசார் தெரிவித்தனர், அமைச்சர் கே.சி.வீரமணியின் அண்ணன் கே.சி.அழகிரிக்கும், அவரது சகோதரர் ராவணனின் குடும்பத்திற்கும் தகராறு இருந்துள்ளது. ராவணனின் மகன் இந்திரஜித் என்பவர் பீடி கம்பெனி மீது பெட்ரோல் குண்டு வீசி சென்றதாக கூறப்படுகிறது. இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.