புதுடெல்லி: உச்ச நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், மாநிலங்களவை நியமன உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளார். உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்த ரஞ்சன் கோகாய், கடந்த ஆண்டு நவம்பரில் பணியில் இருந்து ஓய்வு பெற்றார். இந்நிலையில், அவரை மாநிலங்களவை நியமன உறுப்பினராக நியமித்து ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் நேற்று உத்தரவிட்டுள்ளார். மாநிலங்களவைக்கு இலக்கியம், அறிவியல், கலை மற்றும் சமூகசேவை உள்ளிட்டவற்றில் சிறந்து விளங்கும் 12 பேரை நியமன உறுப்பினராக நியமிப்பது வழக்கம். இந்த நிலையில் மாநிலங்களவையில் நியமன உறுப்பினராக இருந்த மூத்த வழக்கறிஞர் கே.டி.எஸ்.துள்ஷி ஓய்வு பெற்றதை அடுத்து ஏற்பட்ட காலியிடத்துக்கு முன்னாள் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் நியமனம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ரபேல் போர் விமான ஒப்பந்த வழக்கில் மறுசீராய்வு கோரிய மனு மீது தீர்ப்பு கூறியவர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.