புதுடெல்லி: தேசிய குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக ராஜஸ்தான் மாநில அரசு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது. அண்டை நாடுகளான பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளில் இருந்து மத துன்புறுத்தல் காரணமாக கடந்த 2014 டிசம்பர் 31ம் தேதிக்கு முன் இந்தியாவில் குடியேறிய முஸ்லிம் அல்லாத பிற மத சிறுபான்மையினருக்கு குடியுரிமை வழங்கும் வகையில் அச்சட்டத்தில் திருத்தம் கொண்டு வரப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நாட்டின் பல்வேறு பகுதிகளில் போராட்டங்கள் நடந்து வருகின்றன. இந்நிலையில், கேரளாவைத் தொடர்ந்து ராஜஸ்தான் மாநில அரசு சிஏஏ.வுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் நேற்று வழக்கு தொடுத்துள்ளது. அதில், `சிஏஏ.வில் அரசியலமைப்பு சட்டம் வழங்கியுள்ள அடிப்படை உரிமைகளான சமத்துவ உரிமை, வாழ்வுரிமை ஆகியவை மறுக்கப்பட்டுள்ளது. இதனால் அரசியலமைப்பு சட்டம் மீறப்பட்டுள்ளது. இதனை ரத்து செய்து உத்தரவிட வேண்டும்’ என்று கூறப்பட்டுள்ளது.