×

டாக்டர் வீட்டில் நகை திருடிய வேலைக்கார பெண் கைது

கீழ்ப்பாக்கம்: கீழ்ப்பாக்கம், பூந்தமல்லி நெடுஞ்சாலையில் சர்புஜன்தாஸ் தெருவை சேர்ந்தவர் பத்மஜா கிரிஷ் (64). டாக்டர். இவர் அதே பகுதியில் கிளினிக் நடத்தி வருகிறார். இவரது வீட்டில் கடந்த 3 ஆண்டுகளாக கும்பகோணத்தை சேர்ந்த தவுலத் நிஷா (32) என்ற பெண் வீட்டுவேலை பார்த்து வந்தார். இதற்கிடையே, கடந்த 10ம் தேதி தவுலத் நிஷா திடீரென வேலையில் இருந்து நின்றுவிட்டார். அவரை செல்போனில் டாக்டர் தொடர்பு கொண்டபோது சுவிட்ச் ஆப் என வந்தது. இதில் சந்தேகமடைந்த டாக்டர் பத்மஜா, தனது வீட்டின் பீரோவில் இருந்த நகைகளை பரிசோதித்தார். அப்போது, அவரது வீட்டிலிருந்து 30 சவரன் நகைகள் திருடப்பட்டு இருப்பது தெரியவந்தது.

இதுகுறித்து கீழ்ப்பாக்கம் போலீசில் கடந்த 12ம் தேதி டாக்டர் பத்மஜா புகார் அளித்தார். இப்புகாரின்பேரில் இன்ஸ்பெக்டர் தனலட்சுமி தலைமையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, டாக்டரின் வீட்டில் சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர். இந்த ஆய்வில், அவரது வீட்டில் வேலை செய்த தவுலத் என்ற பெண் நகைகளை திருடியது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து கடந்த 2 நாட்களுக்கு முன்பு இன்ஸ்பெக்டர் தனலட்சுமி தலைமையில் தனிப்படை போலீசார் கும்பகோணத்தில் இருந்த தவுலத்தின் வீட்டில் அதிரடி சோதனை நடத்தினர். இச்சோதனையில், டாக்டர் வீட்டில் திருடிய பழைய நகைகளை தவுலத் புதிய நகைகளாக மாற்றி வைத்திருப்பது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து அந்த நகைகளை பறிமுதல் செய்து, நகைகளை திருடிய வேலைக்காரி தவுலத்தை கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.


Tags : Doctor ,home ,maid , Doctor, jewelry, maid, arrested
× RELATED பூசணி விதையின் பயன்கள்!