சென்னை: கொரோனா தடுப்பு நடவடிக்கையாக அனைத்து டாஸ்மாக் கடை ஊழியர்களுக்கும் முகக் கவசம், கிருமி நாசினி வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. இது குறித்து அனைத்து டாஸ்மாக் மதுபான கடை மாவட்ட மேலாளர்களுக்கு மேலாண் இயக்குனர் சுற்றறிக்கை அனுப்பி உள்ளார். உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் இந்தியாவிலும் வேகமாக பரவி வருகிறது. இந்தியாவில் இந்த வைரஸ் தாக்கத்தால் 100க்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டு 2 பேர் உயிரிழந்துள்ளனர். பல்வேறு மாநிலங்களில் வேகமாக பரவி வரும் இந்த வைரஸை கட்டுப்படுத்த மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
தமிழகத்தை பொறுத்தவரை மார்ச் 31ம் தேதி வரை பொதுமக்கள் யாரும் கூட்டமாக கூட வேண்டாம், தொடக்க பள்ளிகளுக்கு விடுமுறை, கர்நாடகா, கேரளா எல்லை ஓரத்தில் உள்ள திரையரங்குக்ள், வணிக வளாகம் மூட உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் டாஸ்மாக் மதுக்கடைகளை மூட உத்தரவிட வேண்டுமென்று சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கின் இன்றைய விசாரணையின் போது, கொரோனா பரவலை தடுக்க டாஸ்மாக் கடைகளில் நடவடிக்கை எடுக்கப்படுகிறதா என்று கேள்வி எழுப்பிய சென்னை உயர்நீதிமன்றம், வழக்கு குறித்து தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு பிறப்பித்துள்ளது.
இந்த நிலையில், கொரோனா வைரஸ் பரவல் தடுப்பு நடவடிக்கையாக அனைத்து டாஸ்மாக் கடை ஊழியர்களுக்கு முகக் கவசம், கிருமிநாசினி வழங்க உத்தரவு பிறப்பிக்கப்படுள்ளது.அனைத்து டாஸ்மாக் மதுக்கடை மாவட்ட மேலாளர்களுக்கும் மேலாண் இயக்குனர் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். டாஸ்மார்க் கடைகளுடன் இணைந்த மது அருந்தும் கூடங்களிலும் கிருமிநாசினி வைக்கப்படுவதை மேலாளர் உறுதி செய்ய வேண்டும் என்றும் அந்த சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.