அரேபியா : கொரோனா அச்சம் காரணமாக பல்வேறு அரபு நாடுகளில் கூட்டுத் தொழுகை ரத்து செய்யப்பட்டுள்ளது. ஜிசிசி எனப்படும் வளைகுடா ஒத்துழைப்பு அமைப்பில் உறுப்பினராக இருக்கும் 6 நாடுகளில் மட்டும் 800 பேர் கொரோனா வைரசுக்கு இலக்காகி உள்ளனர். இதையடுத்து கொரோனா மேலும் பரவாமல் தடுக்கும் விதமாக சவூதி அரேபியா , ஐக்கியா நாடு அமீரகம், குவைத், பஹ்ரைன், கத்தார், ஓமான் ஆகிய நாடுகள் பல திட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர். இந்நிலையில் அரபு நாடுகளில் தொழுகைக்கு பிறகு கை குலுக்குதல், அரவணைத்தல் மற்றும் கன்னத்தில் முத்தமிட்டு வாழ்த்து தெரிவிக்கும் பாரம்பரிய வழக்கங்களை இஸலாமியர்கள் கைவிட்டுள்ளனர்.
ஒருவரை ஒருவர் அரவணைத்து மூக்குகளை உரசி வாழ்த்துகள் தெரிவிக்கும் வழக்கத்தை தவிர்க்குமாறு ஐக்கிய அமீரகமும் கத்தாரும் அறிவுறுத்தியுள்ளனர். ஒருவரை ஒருவர் பார்த்து கையசைத்து கொள்வதே போதுமானது என்று அபுதாபி அறிவுறுத்தி உள்ளது. கொரோனா பரவலை தடுக்கும் விதமாக மசூதிகளில் கூட்டுப் பிரார்த்தனைக்கு குவைத் அரசு தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. மசூதிக்கு வராமல் இல்லத்தில் இருந்தே பிரார்த்தனை செய்யுமாறு குவைத் தலைமை இமாம் அறிவுறுத்தி இருக்கிறார். இதனிடையே உலகளவில் கொரோனா வைரஸால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 6,515ஆக உயர்ந்துள்ளது. மேலும் 157 நாடுகளுக்கு பரவிய கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,69,415ஆக அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.