துருக்கி : அய்லான் குர்தி என்ற 3 வயது குழந்தை உள்ளிட்ட 12 பேர் உயிரிழக்க காரணமான 3 பேருக்கு துருக்கி நீதிமன்றம் தலா 125 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்துள்ளது. உள்நாட்டு போர் நடந்து வரும் சிரியாவில் இருந்து ஆயிரக்கணக்கான மக்கள் ஐரோப்பிய நாடுகளுக்கு அகதிகளாக செல்கின்றனர். அந்த வகையில் 2015ம் ஆண்டு சிரியா அகதிகள் சென்ற படகு துருக்கி அருகே கடலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் 3 வயது ஆண் குழந்தை அய்லான் குர்தி உட்பட 12 பேர் பலியாகினர்.
குழந்தை அய்லான் குர்தியின் உடல் துருக்கி கடற்கரையில் முகம் புதைந்த நிலையில் கிடந்த காட்சி உலகையே உலுக்கியது மட்டுமல்லாமல் சர்வதேச அளவில் விவாதங்களையும் எழுப்பியது. இதையடுத்து அகதிகளை சட்டவிரோதமாக படகில் அழைத்து சென்றதாக 3 பேர் துருக்கி போலீசாரால் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வந்தது. விசாரணை முடிவில் 3 பேர் மீதான அனைத்து குற்றச்சாட்டுகளும் சந்தேகத்திறகு இடமின்றி நிரூபிக்கப்பட்டது, இதையடுத்து அவர்கள் மூவருக்கும் தலா 125 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து துருக்கி நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.