கடந்த டிசம்பர் மாதம் கொரோனா உருவாகி, படிப்படியாக அந்த பீதி உலகை சுற்றி வர ஆரம்பித்தது. சீனாவில் வுகான் மாகாணத்தை முதலில் கொரோனா வைரஸ் தாக்கி, அடுத்தடுத்து பலர் இறந்து கொண்டிருக்க, அந்த நாட்டில் இருந்து இந்தியா உட்பட பல நாடுகளுக்கு வந்தவர்கள் வைரசை பரப்ப ஆரம்பித்தனர். இப்போது நிலை என்ன தெரியுமா? உலகம் முழுவதும் 125 நாடுகளில் கொரோனா ஆட்டிப்படைக்க ஆரம்பித்து விட்டது. மொத்தம் ஒரு லட்சத்து 57 ஆயிரத்து 300 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். நேற்று வரை 5844 பேர் இறந்துள்ளனர். 75,941 பேர் சிகிச்சைக்கு பின்னர் நலம் பெற்றுள்ளனர்.
இந்தியாவில் தீவிரமாக பரவ ஆரம்பித்து விட்டது கொரோனா. பல மாநிலங்களில் பரவியுள்ள இந்த கொடிய வைரஸ், 4 ஆயிரம் பேரை தொற்றியுள்ளது. 84 பேருக்கு தான் ெகாரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. தமிழகத்தை பொறுத்தவரை ஒருவருக்கு தான் கொரோனா, அவரும் நலம் பெற்று வருவதாக அரசு கூறுகிறது. இது எந்த அளவுக்கு உண்மை என்பது போகப்போகத்தான் தெரியும். கொரோனா அதிகரிக்க துவங்கி விட்டது; வெளி மாநிலங்களுக்கு செல்வதை தவிர்க்க வேண்டும் என்று பொதுமக்களை அரசு கேட்டுக்கொண்டுள்ளது.
இன்னொரு பக்கம், பள்ளிகளுக்கு விடுமுறை விடுவதில் மெகா குழப்பம். விமான நிலையங்களில் போதுமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் இல்லை. பயணிகள் அனைவரும் பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவதில்லை என்பது மக்களிடையே பீதியை அதிகரித்துள்ளது. தேசிய பேரிடர் என்று மத்திய அரசு அறிவித்தாலும், அதற்கான நடவடிக்கைகளை செயல்பூர்வமாக எடுக்காமல் இருப்பது மக்களிடம் பயத்தை உருவாக்கியுள்ளது.