கம்பம்: கொரோனா தடுப்பு நடவடிக்கையாக, தேனி மாவட்டத்தில் வைகை அணை, சுருளி அருவி உள்ளிட்ட சுற்றுலாத்தலங்களை மார்ச் 31 வரை மூடுவதற்கு கலெக்டர் உத்தரவிட்டுள்ளார். கேரளாவிலிருந்து நமது மாநிலத்தில் கொரோனா வைரஸ் பரவாமல் இருக்க, எல்லையோர மாவட்டங்களை தீவிரமாக கண்காணித்து, சுற்றுலாத்தலங்கள் உள்ளிட்ட பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களை மூடுவதற்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதனடிப்படையில், தேனி மாவட்டத்தில் பொதுமக்கள் அதிகமாக கூடும் வணிக வளாகங்கள், அனைத்து திரையரங்குகள், வைகை அணை பூங்கா, கும்பக்கரை அருவி, மேகமலை, சின்ன சுருளி மற்றும் சுருளி அருவியில் குளிக்கும் இடம் ஆகியவற்றை இம்மாத இறுதி (மார்ச் 31) வரை மூடுவதற்கு கலெக்டர் பல்லவி பல்தேவ் நேற்று உத்தரவிட்டுள்ளார். இங்கு சுற்றுலாப் பயணிகள் அனுமதிக்கப்படமாட்டார்கள்.
இதேபோல, மக்கள் கூடும் இடங்களான கோயில்கள், மசூதிகள், தேவாலயங்களில் தூய்மைப்படுத்தும் பணிகளை தீவரமாக மேற்கொள்ளவும், அங்கு வரும் மக்களுக்கு நோய் தடுப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் பொதுமக்கள் மற்ற மாநிலங்களுக்கு பயணிப்பதையும், பொது இடங்களில் அதிகமாக கூடுவதையும், அடுத்த 15 நாட்களுக்கு தவிர்க்க கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.