சீர்காழி: சீர்காழி அருகே ரயில் தண்டவாளத்தில் திடீர் விரிசல் ஏற்பட்டது. நாகை மாவட்டம் மயிலாடுதுறையில் இருந்து விழுப்புரம் சென்ற பயணிகள் ரயில் நேற்று காலை 6.10 மணிக்கு சீர்காழியை கடந்து சென்றபோது தண்டவாளத்தில் வழக்கத்திற்கு மாறான சத்தம் கேட்டுள்ளது. இதுகுறித்து டிரைவர், உடனடியாக சீர்காழி ரயில் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார். அவ்வழியாக காலை 6.35 மணிக்கு வந்த திருச்செந்தூர் எக்ஸ்பிரஸ் ரயில் சீர்காழி ரயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டது. தொடர்ந்து ரயில்வே ஊழியர்கள் தண்டவாளத்தை சோதனையிட்டபோது பாதரக்குடி என்ற இடத்தில் தண்டவாளத்தில் விரிசல் ஏற்பட்டிருந்தது தெரியவந்தது.
இதையடுத்து ஊழியர்கள் விரிசலை சரி செய்தனர். பின்னர் ஒரு மணிநேரம் தாமதமாக காலை 7.40 மணிக்கு திருச்செந்தூர் எக்ஸ்பிரஸ் ரயில் சென்னைக்கு புறப்பட்டு சென்றது. இதேபோல் அந்த வழிதடத்தில் வந்த பல ரயில்கள் ஆங்காங்கே பல்வேறு இடங்களில் நிறுத்தப்பட்டன. உரிய நேரத்தில் விரிசல் கண்டு பிடிக்கப்பட்டதால் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.