×

தமிழகத்தில் எல்கேஜி முதல் 5ம் வகுப்பு வரை பள்ளிகளுக்கு 16 நாள் விடுமுறை: கொரோனா தடுப்பு நடவடிக்கைக்கு 60 கோடி16 மாவட்டத்தில் தியேட்டர், மால்கள் மூட உத்தரவு: முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு

சென்னை: தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவாமல் இருக்க வெளிமாநிலங்களுக்கு செல்வதை தவிர்க்க வேண்டும் என்று முதல்வர் எடப்பாடி பழனி சாமி வேண்டுகோள் விடுத்துள்ளார். எல்.கே.ஜி, யு.கே.ஜி மற்றும் துவக்கப் பள்ளிகளுக்கு வருகிற 31ம் தேதி வரை விடுமுறை விடப்பட்டுள்ளது. அது மட்டுமல்லாமல் திருவள்ளூர் உள்பட 16 மாவட்டங்களில் தியேட்டர், மால்களை மூட வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. சீனாவை முதன் முதலாக கொரோனா வைரஸ் தாக்கியது. இந்த தாக்குதலுக்கு 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர். தொடர்ந்து இந்த வைரஸ் உலகம் முழுவதும் பரவி மக்களை ஆட்டி படைத்து வருகிறது. இதற்கு தொடர்ந்து உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளது. இதுவரை ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். கொரோனா வைரஸ் பரவாமல் இருக்க உலக நாடுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

இந்தியாவிலும் கொரோனா வைரஸ் பரவ தொடங்கியுள்ளது. இதுவரை 84 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் ஒருவர் பாதிக்கப்பட்டுள்ளார். அவர் தற்போது குணமடைந்துள்ளார். இருந்த போதிலும் கொரோனா வைரஸ் பரவாமல் இருக்க தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இது தொடர்பாக தமிழக அரசு நேற்று வெளியிட்ட அறிவிப்பு: கொரோனா வைரஸ் நோய் உலகளாவிய பொது சுகாதார அவசர நிலையாக அறிவிக்கப்பட்ட நிலையில், உலக சுகாதார நிறுவனம் இதனை தற்போது உலகளாவிய நோய்த் தொற்றாக அறிவித்துள்ளது. அரசு எடுத்த தீவிர பாதுகாப்பு நடவடிக்கைகளின் காரணமாக, தமிழ்நாட்டில் கொரோனா வைரஸ் நோய் பாதிப்பு இல்லையென்ற போதிலும், இந்த நோய் அண்டை மாநிலங்களிலிருந்து பரவாமல் தடுக்க கீழ்க்கண்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

* தமிழ்நாட்டில் சென்னை, மதுரை, கோவை மற்றும் திருச்சி ஆகிய நான்கு விமான நிலையங்களிலும் வெளிநாட்டிலிருந்து பயணிகள் வருகின்றனர். மத்திய அரசு சில வெளிநாட்டு பயணிகள் வருகையை தடை செய்துள்ளது. எனினும், வெளிநாட்டில் வாழும் இந்தியர்கள் இங்கு திரும்பும் சூழ்நிலை  ஏற்பட்டால், தேவைக்கேற்ப அவர்களை உலக சுகாதார நிறுவனத்தின் வழிமுறைகளின் படி, 14 நாட்கள் தனிமைப்படுத்தி கண்காணிக்க தேவையான வசதிகளை இயன்றவரை அந்தந்த விமான நிலையங்களின் அருகிலேயே ஏற்படுத்த முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.
* அண்டை மாநிலங்களில் இருந்து கொரோனா வைரஸ் நோய் நமது மாநிலத்தில் பரவாமல் கட்டுப்படுத்துவதற்கு, உடனடியாக எல்லையோர மாவட்டங்களில் உள்ள கண்காணிப்பு சோதனை சாவடிகளில், நோய் கண்காணிப்புப் பணிகள் மற்றும் தூய்மைப்படுத்தும் பணிகளைப் போர்க்கால அடிப்படையில் ஒருங்கிணைந்து மேற்கொள்ள வருவாய்த்துறை, காவல்துறை, போக்குவரத்துத்துறை மற்றும் சுகாதாரத்துறை அலுவலர்களுக்கு முதல்வர் அறிவுறுத்தியுள்ளார்.
* தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மழலையர் பள்ளிகளுக்கும் (எல்.கே.ஜி, யு.கே.ஜி), துவக்கப் பள்ளிகளுக்கும் (1ம் வகுப்பு முதல் 5ம் வகுப்பு வரை) வருகிற 31ம் தேதி வரை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
* எல்லையோர மாவட்டங்களான தேனி, கன்னியாகுமரி, திருப்பூர், கோயம்புத்தூர், நீலகிரி, கிருஷ்ணகிரி, திருநெல்வேலி, தென்காசி, திருவள்ளூர், வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, ஈரோடு, திண்டுக்கல், தர்மபுரி, விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் உள்ள எல்லையோர வட்டங்களில் உள்ள திரையரங்குகளையும், மக்கள் அதிகம் கூடும் வணிக வளாகங்களையும் (மால்) வருகிற 31ம் தேதி வரை மூடப்படும்.

* கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளை முடிக்கிவிட முதல்வர் மாநில பேரிடர் நிதியிலிருந்து சுகாதாரம் மற்றும் குடும்பநலத்துறைக்கு 30 கோடி, போக்குவரத்துத்துறைக்கு 5 கோடி, பெருநகர சென்னை மாநகராட்சிக்கு 4 கோடி, நகராட்சி நிர்வாகத்திற்கு 6 கோடி, ஊரக வளர்ச்சித்துறைக்கு 5 கோடி, பேரூராட்சி இயக்குநரகத்துக்கு 2 கோடி, இந்து சமய அறநிலையத்துறைக்கு 3 கோடி, பள்ளிக் கல்வி மற்றும் உயர்க்கல்வித்துறைக்கு 2 கோடி, அங்கன்வாடி மையங்களுக்கு 0.5 கோடி மற்றும் மாவட்ட ஆட்சியர்களுக்கு 2.5 கோடி ஆக மொத்தம் 60 கோடி உடனடியாக வழங்க ஆணையிட்டுள்ளார்.
* மாநிலத்தில் பிற பகுதிகளில் உள்ள  திரையரங்குகள்,  வணிக வளாகங்கள் மற்றும் மக்கள் கூடும் இடங்களான கோயில்கள், மசூதிகள், தேவாலயங்கள் ஆகியவற்றில் தூய்மைப்படுத்தும் பணிகளை தீவிரமாக மேற்கொள்ளவும், இப்பணிகளை கண்காணிக்க தனி அலுவலர்களை நியமிக்கவும் ஊரக வளர்ச்சி, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறைகளுக்கு முதல்வர் ஆணையிட்டுள்ளார்.
* பொது இடங்களில் குறிப்பாக, கோயில்கள், மசூதிகள், தேவாலயங்களுக்கு வருகை புரியும் மக்களுக்கு நோய் தடுப்பு குறித்து விழிப்புணர்வு எற்படுத்தவும், சளி, இருமல், காய்ச்சல் உள்ளவர்களைக் கண்டறிந்து, அத்தகையோரை மக்கள் கூடும் இடங்களுக்கு வருவதைத் தடுக்க தகுந்த தடுப்பு நடவடிக்கைளை மேற்கொள்ளவும் முதல்வர் இந்துசமய அறநிலைத்துறை அதிகாரிகளுக்கும் சுகாதாரத் துறை அதிகாரிகளுக்கும் ஆணையிட்டுள்ளார். பல்வேறு நோய் தடுப்பு நடவடிக்கைகளை கண்காணிக்க மாவட்ட ஆட்சி தலைவர்கள் மற்றும்  மூத்த இந்திய ஆட்சிப் பணி அதிகாரிகளான மாவட்ட கண்காணிப்பு அலுவலர்களுக்கு உத்தரவிட்டுள்ளார்.
* கொரோனா வைரஸ் நோய்த் தடுப்பு நடவடிக்கைகளை தேசியப் பேரிடர் மீட்பு நிதியிலிருந்தும், தேசிய நலவாழ்வு குழும நிதியிலிருந்தும் மேற்கொள்ள மத்திய அரசு அறிவுறுத்தியதன்பேரில், முதல்வர் போர்க்கால அடிப்படையில் நோய்த் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள உத்தரவிட்டுள்ளார்.

* மேலும், மாநிலம் முழுவதும் மேற்கொள்ளப்படும் கொரோனா வைரஸ் நோய்த் தடுப்பு நடவடிக்கைகளை அனைத்துத் துறையினருடன் ஒருங்கிணைந்து செயல்படுத்த வருவாய் நிர்வாக ஆணையருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
* கொரோனா வைரஸ் நோய்த்தடுப்பு நடவடிக்கைகள் குறித்த அறிக்கையினை மாவட்ட ஆட்சித்தலைவர்கள் வருவாய் நிர்வாக ஆணையருக்கு தினந்தோறும் அனுப்ப வேண்டும் என்றும், வருவாய் நிர்வாக ஆணையர் அந்த அறிக்கைகளைத் தொகுத்து, சுகாதாரத் துறை அமைச்சருக்கும், முதல்வருக்கும் தினசரி அறிக்கையாக சமர்ப்பிக்க வேண்டும் என்றும் ஆணையிடப்பட்டுள்ளது.
* மாநிலத்தில் மேற்கொள்ளப்படும் கொரோனா நோய்த் தடுப்பு நடவடிக்கைகளை ஊடகங்களுக்கு அவ்வப்போது தெரிவிக்க சுகாதாரத் துறை அமைச்சரை முதல்வர் அறிவுறுத்தியுள்ளார்.  மேலும், பொதுமக்கள் கீழ்க்கண்ட அறிவுரைகளை பின்பற்ற முதல்வர் வேண்டுகோள் விடுத்துள்ளார் :
* பொதுமக்கள் மற்ற மாநிலங்களுக்கு பயணிப்பதையும், பொது இடங்களில் அதிக அளவில் மக்கள் கூடுவதையும் அடுத்த 15 நாட்களுக்குத் தவிர்க்க வேண்டும்.
* கூட்டம் நிறைந்த பொது இடங்களுக்கு வயதானவர்கள், நோய்வாய்ப்பட்டவர்கள், குழந்தைகள் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி குறைந்த நபர்கள் பயணம் செய்வதை தவிர்க்க வேண்டும்.
* பொதுமக்கள் அனைவரும் தனிநபர் சுகாதாரத்தினை பேணவும், குறிப்பாக வீட்டிற்குள் நுழையும் போதும், அவ்வப்போதும் கைகளை சோப்பு போட்டு சுத்தமாக கழுவுவதை உறுதி செய்ய வேண்டும்.
* கைகளை சுத்தம் செய்யாமல், முகத்தை தொட வேண்டாம்.
* பெற்றோர் தங்கள் குழந்தைகள் விடுமுறை நாட்களின்போது குழுவாக விளையாடாதவாறு கண்காணிக்கவும், வீட்டிற்குள் நுழைந்தவுடனும், அவ்வப்போதும் கைகளை சோப்பு போட்டு சுத்தமாக கழுவுவதை உறுதி செய்ய வேண்டும்.
* கொரோனா வைரஸ் நோயை தடுப்பதற்கான முயற்சிகளை அனைவரும் மேற்கொண்டால் தான் வெற்றிபெற இயலும் என்பதை கருத்தில் கொண்டு அனைத்து தரப்பு மக்களும் அரசின் முயற்சிகளுக்கு முழு ஒத்துழைப்பு நல்கிடவேண்டுமென்றும், நோய்க்கான அறிகுறி உள்ளவர்களை உடனடியாக அரசு மருத்துவமனைகளை அணுகவும்  முதல்வர் வேண்டுகோள் விடுத்துள்ளார். இவ்வாறு அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

Tags : holidays ,schools ,LKG ,Tamil Nadu ,Coronation Prevention Action School , School, holiday, corona, action
× RELATED நெல்லையில் எல்கேஜி அட்மிஷனுக்காக...