×

ஆவடி மாநகராட்சி சாலைகளில் நடைபாதை கடைகளால் போக்குவரத்து பாதிப்பு

ஆவடி: ஆவடியில் இருந்து பூந்தமல்லி செல்லும் நெடுஞ்சாலையில் தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன.  மேலும், இச்சாலையை இணைக்கும் வகையில் நேரு பஜார் சாலை, புதிய ராணுவ சாலை, சி.டி.எச் சாலை உள்ளது. இந்த சாலைகளை பயன்படுத்தி தான் தாலூகா அலுவலகம், போலீஸ் நிலையம், மார்க்கெட், சார் பதிவாளர் அலுவலகம், போலீஸ் துணை கமிஷனர் அலுவலகம், ரயில் நிலையம், நகராட்சி அலுவலகம், பஸ் நிலையம், சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் உள்ளிட்டவைகளுக்கு சென்று வர வேண்டும். இச்சாலைகள் வழியாக தினமும் ஆயிரக்கணக்கான மக்கள் பல்வேறு பணிகளுக்கு சென்று வருகின்றனர். இது குறித்து பொதுமக்கள் கூறுகையில்,  பூந்தமல்லி சாலை - நேரு பஜார் சாலை சந்திப்பில் மாலை, இரவு வேளைகளில் ஷேர் ஆட்டோக்களை நிறுத்தி சவாரிக்கு பயணிகளை அழைக்கின்றனர். இதனால் சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டு பாதசாரிகள் நடக்க முடியவில்லை. இதனால் பொதுமக்கள் கடும் அவதிப்படுகின்றனர். மேலும் இரவு நேரங்களில் இச்சாலை சந்திப்பில் ஆம்புலன்ஸ், தீயணைப்பு வாகனங்களும் சிரமப்பட்டே சென்று வருகின்றன. நேரு பஜாரில் சாலை ஓரங்களை ஆக்கிரமித்து காய்கறி கடைகள், பழக்கடைகள், துணி கடைகளும் ஏராளமாக உள்ளன.  இச்சாலை வழியாக தான் பல்வேறு அரசியல் கட்சிகளின் ஊர்வலங்கள், போராட்டங்கள், மறியல் உள்ளிட்டவைகளும் அடிக்கடி நடக்கின்றன. இதனால், அடிக்கடி போக்குவரத்து பாதிக்கப்பட்டு பொதுமக்கள் சிரமப்பட்டு வருகின்றனர்.  

சமீபத்தில் தான் புதிய ராணுவ சாலையில் பல்வேறு வகையான ஆக்கிரமிப்புகளை நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் அகற்றினர். இருந்த போதிலும் அதே இடங்களில் மீண்டும் ஆக்கிரமிப்புகள் உருவாகி விட்டன. இச்சாலையில் விளம்பர போர்டுகள், நடைப்பாதை கடைகளும் அமைத்து உள்ளனர். மேலும், இச்சாலை ஓரங்களை ஆக்கிரமித்து நான்கு சக்கர வாகனங்களில் பழங்களை வைத்தும் விற்பனை செய்து வருகின்றனர். இதனால் சாலை ஓரங்களில் பாதசாரிகள் நடக்க முடியவில்லை. இவர்கள் சாலையிலேயே நடந்து செல்வதால் கனரக வாகனங்கள், லாரி,  பஸ்கள் மோதி பல்வேறு விபத்துகள் அடிக்கடி நடக்கின்றன. இதே போல், சி.டி.எச் சாலைகளிலும் அமரர் ஊர்தி, தள்ளு வண்டி கடைகளும் ஆக்கிரமித்துள்ளன. எனவே, இனி மேலாவது அரசு துறை அதிகாரிகள் ஒன்றிணைந்து நேரு பஜார், பூந்தமல்லி சாலை, புதிய ராணுவ சாலை, சி.டி.எச் சாலையில் போக்குவரத்து இடையூறான வகையில் நிறுத்தப்படும் ஷேர் ஆட்டோக்கள், பழவிற்பனை வாகனங்கள், அமரர் ஊர்திகள், நடைப்பாதை கடைகளை அகற்ற கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

Tags : Sidewalk Shops ,Awadhi Municipal Roads , Impact, Traffic, Sidewalk Shops , Awadhi Municipal Roads
× RELATED ஆவடி செக்போஸ்ட் அருகே சாலையோர ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றம்