புதுடெல்லி: சிஆர்பிஎப்.பின் 81வது நிறுவன நாள் இந்த வாரம் கொண்டாடப்பட இருந்த நிலையில், கொரோனா பீதியால் ரத்து செய்யப்பட்டது. இதனால் குர்கானில் உள்ள சிஆர்பிஎப். வீரர்களின் நினைவிடத்தில் மரியாதை செலுத்திய பின்னர் சிஆர்பிஎப் இயக்குநர் ஏ.பி. மகேஸ்வரி பேசியதாவது:சிஆர்பிஎப் வீரர்கள் அனைவரது குடும்பத்தினருக்கும் விரிவான மருத்துவக் காப்பீடு வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கான முழுத் தொகையும் நலத்திட்ட நிதியில் இருந்து பெறப்பட உள்ளது. இதன் மூலம், பணியின் போது நாட்டிற்காக தங்கள் இன்னுயிரை நீத்த 2,200 சிஆர்பிஎப் வீரர்களின் குடும்பத்தினரும் பயனடைவர். இது தவிர, போரின்போது காயமடைந்து மாற்றுத் திறனாளிகளான வீரர்களைப் பயன்படுத்தும் வகையில், அவர்களுக்கு செயற்கை நுண்ணறிவு, சைபர் ஸ்பேஸ் தொழில்நுட்பம் பயிற்சி அளிக்கப்பட உள்ளது என்றார்.