புதுடெல்லி: ஈரானில் சிக்கித் தவித்த 234 இந்தியர்கள், நாடு திரும்பியதாக வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். சீனாவில் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ், தற்போது பல்வேறு நாடுகளிலும் தனது கோர முகத்தை காட்ட ஆரம்பித்துள்ளது. கொரோனாவால் மோசமாக பாதிக்கப்பட்ட நாடுகளில் ஈரானும் ஒன்றாகும். இந்நிலையில், ஈரானில் 234 இந்தியர்கள் சிக்கித் தவித்தனர். விமானப் போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளதால் அவர்களால் நாடு திரும்ப முடியவில்லை. இதனைத்தொடர்ந்து அவர்களை மீட்டு இந்தியா அழைத்து வருவதற்கு மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டது.
இதன்படி அங்கு அனுப்பப்பட்ட சிறப்பு விமானம் மூலமாக 58 யாத்ரீகர்கள் கொண்ட முதல் குழுவினர் ஈரானில் இருந்து கடந்த செவ்வாயன்று தாய்நாட்டுக்கு அழைத்து வரப்பட்டனர். 44 யாத்ரீகர்கள் கடந்த வெள்ளியன்று இந்தியா வந்தனர். மூன்றாவதாக 234 பேர் அடங்கிய குழு நேற்று நாடு திரும்பியது. இதுதொடர்பாக வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் தனது டிவிட்டர் பதிவில், “ஈரானில் சிக்கி தவித்த 131 மாணவர்கள், 103 யாத்ரீகர்கள் உட்பட 234 இந்தியர்கள் நாடு திரும்பினார்கள். தூதர் தாமு கட்டாம் மற்றும் ஈரான் குழுவினரின் முயற்சிக்கு நன்றி. ஈரான் அதிகாரிகளுக்கும் நன்றி” என கூறியுள்ளார்.