×

தேனியில் 20 மூடை புகையிலை பொருட்கள் பறிமுதல்: தனியார் மில்லுக்கு சீல்

தேனி: தேனியில் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான 20 மூடை புகையிலை பொருட்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். புகையிலை பொருட்கள் பதுக்கிய தனியார் மில்லுக்கு சீல் வைக்கப்பட்டது. தேனி மாவட்டத்தில், தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறதா என அதிகாரிகள் ஆய்வு செய்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர். தேனி அல்லிநகரம் பழைய ஓடைத்தெருவில் தனியார் மில் உள்ளது. இந்த மில்லில் புகையிலை பொருட்கள் பதுக்கி வைத்திருப்பதாக அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து நேற்றிரவு மில்லில் சோதனையிட உணவு பொருள் பாதுகாப்பு அதிகாரிகள், மருத்துவ துறை, வருவாய்த்துறை மற்றும் போலீசார் சென்றனர். அதிகாரிகள் வருவதை அறிந்ததும், மில்லில் இருந்தவர்கள் மில்லை பூட்டிவிட்டு தப்பியோடி விட்டனர். மில் கதவை உடைத்து அதிகாரிகள் உள்ளே சென்று பார்த்த போது, தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் 20 மூடைகளில் இருந்தது தெரியவந்தது. இதன் மதிப்பு பல லட்சம் ரூபாய் இருக்கும் என கூறப்படுகிறது. புகையிலை மூடைகளை அதிகாரிகள் பறிமுதல் செய்து மில்லுக்கு சீல் வைத்தனர். இந்த மில் யாருக்கு சொந்தமானது, இங்கிருந்து எங்கெங்கு புகையிலை பொருட்கள் கடத்தப்பட்டது என்பது குறித்தும், தப்பியோடிவர்கள் குறித்தும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Tags : Theni, pack tobacco products, confiscated
× RELATED யானை தாக்கி விவசாயி பலி