×

வேதாரண்யம் பகுதி உப்பள தொழிலாளர்களுக்கு அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கப்படுமா?: கோரிக்கை விடுத்தும் செவி சாய்க்காத அரசு...15ஆயிரம் தொழிலாளர்கள் குமுறல்

தூத்துக்குடி: தமிழகத்தில் தூத்துக்குடி,வேதாரண்யம், மரக்காணம், கோவளம், அதிராம்பட்டினம், செய்யூர், கேளம்பாக்கம், கடலூர் உள்ளிட்ட இடங்களில் 16,688 ஏக்கரில் உப்பு உற்பத்தி நடை பெறுகிறது. 11800 உப்பு உற்பத்தியாளர்கள் உள்ளனர். இந்த உப்பு உற்பத்தி தொழிலில் 1 லட்சத்து 4 ஆயிரம் தொழிலாளர்கள் நேரிடையாக ஈடுபட்டுள்ளனர்.தமிழகத்தில் தூத்துக்குடிக்கு அடுத்தபடியாக உப்பு உற்பத்தியில் இரண்டாம் இடம் வகிக்கும் வேதாரண்யத்தில் அகஸ்தியன் பள்ளியில் 3000 ஏக்கரில் சிறு குறு உற்பத்தியாளர்களும் கோடியக்காடு கடினல் வயல் பகுதிகளில் 6000 ஏக்கரில் இரு தனியார் நிறுவனமும் உப்பு உற்பத்தியில் ஈடுபடுகிறது. இங்கு ஆண்டுதோறும் 9000 ஆயிரம் ஏக்கரில் 6½ லட்சம் டன் உப்பு உற்பத்தி நடைபெறும். தமிழகம் முழுவதும் இத்தொழிலில் நேரடியாகவும், மறைமுகமாகவும் சுமார் 25 லட்சம் தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

வேதாரண்யத்தில் உப்புஉற்பத்தியில் 10 ஆயிரம் தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர். ஆண்டுதோறும் ஜனவரி மாதம் உப்பு உற்பத்தி துவங்கி செப்டம்பர் வரை உற்பத்தி செய்யப்படுகிறது. வேதாரண்யத்தில் உற்பத்தியாகும் உப்பு ஆந்திரா, கர்நாடகா, கேரளா உள்ளிட்ட வெளிமாநிலங்களுக்கும், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் அனுப்பி வைக்கப்படுகிறது. உலகில் உப்புஉற்பத்தியில் அமெரிக்கா முதலிடத்தையும், சீனா இரண்டாமிடத்தையும், இந்தியா மூன்றாமிடத்தையும் வகிக்கிறது. இந்தியாவில் ஆந்திரா, கோவா, குஜராத், ஹிமாச்சலபிரதேஷ், கர்நாடகா, மஹாராஷ்ட்ரா, ஒரிசா, ராஜஸ்தான், தமிழ்நாடு, மேற்குவங்காளம் அகிய மாநிலங்களில் 6.09 லட்சம் ஏக்கரில் உப்பு உற்பத்தி நடைபெறுகிறது.

ஆண்டுதோறும் இந்தியாவில் 27 மில்லியன் டன் உப்பு உற்பத்தி செய்யப்படுகிறது. இதில் 76.7 சதவீதம் குஜராத்திலும் தமிழ்நாட்டில் 11.16 சதவீதமும், ராஜஸ்தானில் 9.8 சதவீதமும் உற்பத்தி செய்யப்படுகிறது. மொத்த உற்பத்தியில் 62 சதவீதம் பெரிய உற்பத்தியாளர்கள் மூலமும் 28 சதவீதம் சிறுஉற்பத்தியாளர்கள் மூலமும் உற்பத்தி செய்யப்படுகிறது. சாப்பாட்டு உப்பு 60 லட்சம் டன் உற்பத்தி செய்யப்படுகிறது. மீதமுள்ள அனைத்து உப்பும் தொழிற்சாலை உப்பாக பயன்படுத்தப்படுகிறது. இதிலிருந்து காஸ்டிக் சோடா, சோடா ஆஷ் தயாரிக்கப்படுகிறது. சோடா ஆஷ் கண்ணாடிதயாரிக்கவும் மற்றும் உப்பு மூலப்பொருளாக கொண்டு 72 வகையான பொருட்கள் தயார் செய்யப்படுகிறது. உப்புத்துறை கணக்கின்படி இந்த பத்து மாநிலங்களிலும் நேரிடையாக 1 லட்சத்து 4 ஆயிரத்து அறுபது பேர் இத்தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர்.

அயோடின் கலந்து விற்பனை செய்யும் பிளாண்டுகள் 578 உள்ளது. உப்பு உற்பத்தி செய்யும் உற்பத்தியாளர்கள் அதற்கேற்றவிலை கிடைக்காமல் தொழிலை விடும் நிலையில் உள்ளனர். தற்போது ஒரு டன் உப்பு ரூ 500 முதல் 800 வரை விற்பனையாகிறது.
உற்பத்தி முழுவீச்சில் அடைந்தவுடன் ஒரு டன் ரூ.350 முதல் 400 வரை மட்டுமே ஆறுமாத காலத்திற்கு விற்பனையாகும். பின்பு மழைக்காலம் துவங்கினால் தான் உப்புக்கு விலை இருக்கும். ஆட்கள் வைத்து வேலை செய்யும் கூலி கூட உற்பத்தியாளர்களுக்கு லாபம் கிடைப்பதில்லை. இதே போல் உப்பளத் தொழிலாளர்களின் குடும்பத்தை சேர்ந்த ஆண் பெண் தொழிலாளர்கள் நள்ளிரவு 2 மணிக்கு உப்பளத்திற்கு வந்து வேலை துவங்கும் அவர்கள் மதியம் வரை வேலை செய்கின்றனர். ஆனால் அவர்களுக்கு ஏற்ற சம்பளம் கிடைப்பதில்லை என வருத்தம் தெரிவிக்கின்றனர்.

உப்பளத்தில் வேலை செய்யும் தொழிலாளர்களுக்கு குடிநீர், கழிவறை, ஓய்வெடுக்கும் அறை என்று எதுவுமே கிடையாது. உப்பளத்தில் வேலை செய்யும் தொழிலாளர்களுக்கு காலுறை, கையுறை, கருப்பு கண்ணாடி இல்லாமல் வேலை பார்ப்பதால் அவர்களுக்கு தோல் நோய் மற்றும் கண் பார்வை குறைபாடு நோய்கள் வருகின்றன. தாங்கள் எவ்வித பாதுகாப்பும் அற்ற சூழ்நிலையில் வேலை பார்ப்பதாக பெண் தொழிலாளர்கள் கவலைதெரிவித்தனர். உற்பத்தியாளர்களுக்கும் உப்பள தொழிலாளர்களுக்கும் ஏற்படும் பிரச்சினைக் கெல்லாம் காரணம் உப்புக்குவிலை இல்லாததுதான். குடிசைத் தொழிலாக செய்யப்பட்ட இந்த உப்பு உற்பத்தி தற்போது பெரிய கம்பெனிகளில் இயந்திரங்கள் மூலம் உற்பத்தி செய்யப்படுகிறது. இதனால் தொழிலாளர்களுக்கு வேலை வாய்ப்பு குறைந்து கொண்டே வருகிறது. ஆங்கிலேயர் ஆட்சியை விரட்ட தண்டியில் காந்தியும், வேதாரண்யத்தில் இராஜாஜி தலைமையில் சர்தார் வேதரெத்தினமும் ஆயிரக்கணக்கனோர் உப்புசத்தியாகிரக போராட்டம் நடத்தினர்.

வேதாரண்யம் தாலுக்கா அகஸ்தியன்பள்ளியில் உப்பு சத்தியாகிரக போராட்டம் நடத்தியவர்களை அப்போதைய ஆங்கில அரசு சிறை வைத்த சிறைச்சாலை இன்னமும் நினைவுச்சின்னமாக உள்ளது. உப்பு சத்தியாகிரக நினைவுத்தூண் ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளது. மறைந்தமுன்னாள் மத்தியஅமைச்சர் முரசொலிமாறன் முயற்சியில் தன்பாடு உப்பளங்களுக்கு நீண்டகாலமாக பீமோ (அபராதம்) செலுத்தி வந்தனர். இதற்கு மத்தியஅரசிடம் குத்தகை தாராகமாற்ற அணுகிய போது மத்திய அரசு உப்பு இலாக்கா 20 ஆண்டுகள் நிலுவையிலிருந்தகுத்தகை தொகையினை செலுத்தினால் தான் குத்தகைதாரராக அங்கிகரிக்க முடியும் என்று கூறினர். உற்பத்தியாளர்கள் மத்தியஅமைச்சர் முரசொலிமாறனை அணுகியபோது அந்த குத்தகையை ரத்து செய்து கொடுத்தார். இதனால் உப்பு உற்பத்தியாளர்களுக்கு பல லட்ச ரூபாய் பயன் கிடைத்தது.

தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் அகலரயில் பாதை சரியான சாலைவசதி இல்லாததால் உப்பு ஆண்டு முழுவதும் தேக்கம் ஏற்படுகிறது. சென்ற ஆண்டு அதிகளவில் தேக்கம் ஏற்பட்ட நிலையில் உப்பை விற்பதற்கு பல்வேறு இடங்களில் உப்பு தட்டுப்பாடு என்ற வதந்தியை கிளப்பி உப்பை விற்றனர். இதனால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகினர். வேதாரண்யம் பகுதியில் கடந்த 25 ஆண்டுகளாக தேர்தலின் போது ஒவ்வொரு அரசியல் கட்சியும் இப்பகுதிக்குசோடா ஆஷ், காஸ்டிக்கு தொழிற்சாலை கொண்டு வருவதாக அளிப்பார்கள். ஆனால் இன்று வரை எந்த ஒரு சிறு துரும்பைக் கூட கிள்ளி போட்டது கிடையாது.

மறைந்த முதல்வர் ஜெயலலிதா சட்டசபையில் வேதாரண்யத்தில் 200 கோடி ரூபாயில் சோடா ஆஷ் தொழிற்சாலை துவங்குவதாக அறிவித்தார். மேலும் தமிழக அரசின் உப்புத்துறை மூலம் இப்பகுதியில் 10 ஆயிரம் ஏக்கர் உப்பளங்கள் விரிவு படுத்தப்படும் என்ற அறிவிப்பும் வெளியானது. அதும் அறிவிப்போடு நின்று விட்டது. உப்பு தொழிற்சாலை வேதாரண்யம் பகுதிக்கு வரும் உப்பளத்தொழில் விரிவுபடுத்தப்படும் இதன் மூலம் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் வேலை வாய்ப்பு பெறலாம் என்றமக்களின் கனவுவெறும் கனவாகவேஉள்ளது. இந்தியாவில் 87.6 சதவீதம் சிறு உற்பத்தியாளர்களும் (10 ஏக்கருக்கு குறைவாக உள்ளவர்கள்) 5.8 சதவீதம் பெரிய உற்பத்தியாளர்களும் (100 ஏக்கருக்குமேல்) உள்ளனர். தமிழ்நாட்டில் சராசரியாக ஆண்டு ஒன்றுக்கு 25 லட்சம் டன் உப்பு உற்பத்தி நடை பெறுகிறது. இதில் இரயில் மூலம் 60 சதவீதமும், லாரி மூலம் 38 சதவீதமும் கப்பல் மூலம் 2 சதவீதமும் ஏற்றுமதியாகிறது.

இந்தியாவில் இருந்து ஆண்டு ஒன்றுக்கு 35 லட்சம் டன் உப்பு ஜப்பான், பங்களாதேஷ், இந்தோனிசியா, கொரியா, மலேசியா, வியட்நாம், கத்தார் ஆகிய நாடுகளுக்கு ஏற்றுமதியாகிறது. இந்தியாவில் உற்பத்தியாகும் உப்புசிறு உற்பத்தியாளர்கள், பெரிய உற்பத்தியாளர்கள், அரசு என மூன்று வகையில் உப்பு உற்பத்தி நடைபெறுகிறது. சிறுஉற்பத்தியாளர்களை பெரிய நிறுவனங்கள் சிறு உற்பத்தியாளர்கள் விற்பனை சந்தையில் நுழைவதால் சிறுஉற்பத்தியாளர்கள் தங்கள் தொழிலை விட்டு விலகும் நிலை ஏற்பட்டுள்ளது. உப்பில்லா பண்டம் குப்பையிலே என்பார்கள். ஆனால் சிறுஉற்பத்தியாளர்களின் உப்பிற்கு சரியான விலை கிடைக்காததால் அவர்களின் உப்புத்தொழில் கேள்விக்குறியாகி உள்ளது.

இதுகுறித்து உப்பு உற்பத்தியாளர் காமராஜ் கூறுகையில், வேதாரண்யம் அடுத்த அகஸ்தியன் பள்ளியில் உள்ள உப்பளத்தொழிலாளர்களுக்கு அடிப்படை வசதிகளான குடிநீர், கழிவறை, ஓய்வறை, உள்ளிட்ட வசதிகளை செய்து கொடுக்கவேண்டும். மேலும் உப்பளப் பகுதியில் உப்பு பாக்கெட் போடும் தொழிலாளர்கள் மழை மற்றும் வெயில் காலங்களில் திறந்த வெளியிலேயே பாக்கெட் போடுகின்றனர். வெயில் மழையில் சிரமப்படும் தொழிலாளர்களுக்கு ஒரு நிரந்தர ஷெட் அமைத்துக் கொடுக்கவேண்டும் என்றார்.
சிறுஉப்பு உற்பத்தியாளர்கள் இணையச் செயலாளர் செந்தில் கூறுகையில், வேதாரண்யம் அடுத்த அகஸ்தியன் பள்ளியில் உள்ள உப்பளங்கள் கஜா புயலால் பாதிக்கப்பட்டுவிட்டது. அதிலிருந்து இன்னும் உற்பத்தியாளர்களும் தொழிலாளர்களும் மீளவில்லை. மத்திய மாநில அரசுகள் கஜா புயல் பாதித்த அனைவருக்கும் நிவாரணம் வழங்கியுள்ளது. ஆனால் உப்பளத்திற்கு இதுவரை வழங்கவில்லை. எனவே உப்பளத் தொழிலாளர்களின் நலன் கருதி கஜா புயல் பாதித்த உப்பு உற்பத்தியாளர்களுக்கும் தொழிலாளர்களுக்கும் கஜா புயல் நிவாரணம் வழங்கவேண்டும் என்றார்.

Tags : Vedaranyam ,area , Will the Vedaranyam area be given basic amenities?
× RELATED வேதாரண்யத்தில் 3 நாட்களாக மக்களை...