சென்னை: நடிகர் சங்கத்தை போன்று அரசு அதிகாரி கட்டுப்பாட்டில் தேர்தல் நடத்த வேண்டும் என தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து சென்னையில் நேற்று சங்க நிறுவனர் போஸ், செய்தி தொடர்பாளர் அருள்ராஜ் மற்றும் சட்டப்பிரிவு செயலாளர் க.கிருஷ்ணகுமார் ஆகியோர் கூட்டாக நிருபர்களுக்கு அளித்த பேட்டி:தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கம் பதிவுசெய்யப்பட்ட சங்கமாக செயல்பட்டு வருகிறது. இந்நிலையில், 2008ல் நடைபெற்ற சங்க தேர்தலில் சில முறைகேடுகள் நடந்தது என்று சென்னை உயர் நீதிமன்றம் மற்றும் சென்னை பெருநகர் நீதிமன்றத்திலும் வழக்கு நடந்தது. இந்தநிலையில், இன்றுவரை தேர்தல் நடத்தாமல் ஓய்வு பெற்ற சங்க பொதுச்செயலாளர் வெங்கடேஸ்வரன் தனக்கு வேண்டியவர்களை பொறுப்பாளர்களாக நியமித்து வருகிறார். விருப்ப ஓய்வு பெற்ற பிறகும் மூத்த பொதுச்செயலாளர் என்று அறிவித்துக்கொண்டு செயல்படுகிறார்.
எனவே, சங்கத்தில் தேர்தல் நடத்த வேண்டும் என கடந்த 12ம் தேதி பணிகள் மற்றும் நிர்வாக சீர்திருத்தத்துறை செயலாளர், பதிவுத்துறை தலைவர் ஆகியோருக்கு மனு அளித்துள்ளோம். அரசு அங்கீகாரம் பெற்ற சங்கத்தில் ஓய்வு பெற்றவர்கள் பொறுப்பாளர்களாகவோ, உறுப்பினர்களாகவோ இருக்கக்கூடாது. ஆனால், வெங்கடேஸ்வரன் மூத்த பொதுச்செயலாளர் என்ற பதவியில் உள்ளார். சங்க கட்டிடம் யாருடைய பயன்பாடுமின்றி பூட்டப்பட்டுள்ளது. கட்டிடத்தை தேர்தல் நடத்தி புதிய பொறுப்பாளர்களிடம் ஒப்படைக்க வேண்டும். மேலும், நடிகர் சங்கத்தை பதிவாளர் கட்டுப்பாட்டில் எடுத்துக்கொண்டதை போல தேர்தல் நடத்தும் வரை அரசு அதிகாரி பொறுப்பில் தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கம் நிர்வகிக்கப்பட வேண்டும்.
இதேபோல், தமிழ்நாடு முழுவதும் பணியாற்றும் கிராம நிர்வாக அலுவலர்கள் அனைவரையும் வாக்காளர் பட்டியலில் சேர்த்து ஒரே சங்கமாக தேர்தல் நடத்த அரசு ஏற்பாடு செய்ய பதிவுத்துறை தலைவர் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு கூறினர்.