காரிமங்கலம்: தர்மபுரி அருகே நேற்று அதிகாலை தண்ணீர் தேடி ஊருக்குள் வந்த ஆண் யானை, கிணற்றில் தவறி விழுந்தது. வனத்துறையினர், 4 மணி நேரம் போராடி அந்த யானையை மீட்டனர்.தர்மபுரி மாவட்டம், காரிமங்கலம் அடுத்த காட்டுசீகலஅள்ளி பகுதிக்கு, கடந்த 11ம் தேதி இரவு 2 ஆண் யானைகள் இடம்பெயர்ந்து வந்தன. தகவலின்பேரில், மறுநாள் அப்பகுதிக்கு வனத்துறையினர் வந்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அன்றிரவு அருகில் உள்ள தேவர்முக்குளம் பகுதிக்கு சென்ற யானைகள், விளைநிலங்களுக்குள் புகுந்து தக்காளி, கரும்பு பயிர்களை தின்றும் மிதித்தும் துவம்சம் செய்தன. இதனிடையே, நேற்று அதிகாலை 1 மணியளவில், இரண்டு யானைகளும் தண்ணீர் தேடி காட்டு சீகலஅள்ளி பகுதிக்கு மீண்டும் வந்தன.
அப்பகுதியில் பூக்கடை ராமன் என்பவருக்கு சொந்தமான விவசாய கிணறு உள்ளது. இதன் அருகே வந்த யானைகள் தண்ணீர் குடிக்க முயன்றன. அப்போது, ஒரு யானை கிணற்றில் தவறி விழுந்தது. அதில் தண்ணீர் குறைவாக இருந்ததால், உயிர்தப்பிய யானையின் பிளிறல் சத்தம் கேட்டு கிராம மக்கள் திரண்டனர். கூட்டத்தை கண்டதும் மற்றொரு யானை அங்கிருந்து காட்டுக்குள் சென்று விட்டது. தகவலின்பேரில், கிருஷ்ணகிரி, தர்மபுரி வனத்துறையினர் வந்து மீட்பு பணியை துரிதப்படுத்தினர். பொக்லைன் இயந்திரம் மூலம் சுமார் 50 அடி ஆழத்திற்கு கிணற்றின் பக்கவாட்டில் பள்ளம் தோண்டினர். மேலும், யானை மீண்டு வருவதற்காக மண் பாதையும் அமைக்கப்பட்டது. சுமார் 4 மணி நேர போராட்டத்திற்கு பின்பு, அப்பாதை வழியாக யானை மேலே வந்தது. சிறிது நேரத்தில் அங்கிருந்து வனப்பகுதிக்குள் ஓட்டம் பிடித்தது.