டெல்லி: கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க இந்தியா உள்ளிட்ட உள்ளிட்ட சார்க் நாடுகள் நாளை ஆலோசனை நடத்தவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சீனாவில் இருந்து தொடங்கிய கோவிட்-19 கொரோனா வைரஸ் உலக முழுவதும் 127 நாடுகளுக்கு பரவி இருக்கிறது. இதுவரை லட்சக்கணக்கான மக்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். சர்வதேச அளவில் கொரோனா வைரசால் பலியானோர் எண்ணிக்கை 5,000 ஆக அதிகரித்துள்ளது. இந்தியாவிலும் கொரோனா வைரஸ் பாதித்தோர் எண்ணிக்கை 85 ஆக அதிகரித்துள்ளது. இதனால் பல மாநிலங்களிலும் கடுமையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
கொரோனா வைரஸ் தாக்குதல் அதிகரித்து வரும் நிலையில், தேசிய பேரிடராக அறிவித்த மத்திய அரசு, கொரோனா வைரஸ் பாதிப்பை பேரிடராக கருதி மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். கொரோனா வைரஸ் தாக்குதல் மூலம் உயிரிழந்தோர் குடும்பத்திற்கு ரூ.4 லட்சம் நிவாரணம் வழங்க மாநில அரசுகளுக்கு அறிவுறுத்தியுள்ளது.
இதற்கிடையே, கொரோனா வைரஸ் பரவாமல் தடுப்பது பற்றி ஆலோசனை நடத்த தெற்காசிய நாடுகளின் கூட்டமைப்பான சார்க் நாடுகளுக்கு பிரதமர் நரேந்திர மோடி வீடியோ கான்பரன்ஸ் மூலமாக அழைப்பு விடுத்திருந்தார். பிரதமர் மோடியில் அழைப்பை ஏற்று சார்க் நாடுகளின் தலைவர்கள் காணொலியில் நாளை மாலை ஆலோசிப்பதாக தகவல் தெரிவிக்கப்படுகிறது. பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகள் மோடியின் அழைப்பை ஏற்றுள்ளன. சார்க் அமைப்பில் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, நேபாளம், வங்கதேசம், பூடான், மாலத்தீவு, ஆப்கானிஸ்தான் உள்ளது குறிப்பிடத்தக்கது.
பூடான் பிரதமர் டுவிட்:
பிரதமர் மோடியின் அழைப்பை ஏற்ற முதல் நாடான பூடான் பிரதமர் லொதே ஷெரிங், தனது டுவிட்டர் பக்கத்தில், இதனைத் தான் நாம் தலைமை பண்பு என்று அழைக்கிறோம். இந்த பிராந்தியத்தைச் சேர்ந்த உறுப்பினர்களாகிய நாம் அனைவரும், இதுபோன்ற காலங்களில் ஒன்றிணைந்து செயல்பட வேண்டியது அவசியம். சிறிய பொருளாதாரங்கள் கடுமையாக பாதிப்பு அடைந்துள்ளன. ஆகையால் அனைவரும் இணைந்து செயல்படுவோம். உங்களது தலைமையின் கீழ் பயனுள்ள முடிவுகளை காண்போம். வீடியோ சந்திப்பை விரைவில் எதிர்பார்க்கிறேன் என்று பதிவிட்டிருந்தார்.
மாலத்தீவு அதிபர் டுவிட்:
மாலத்தீவு அதிபர் இப்ராஹிம் மொகம்மத் சோலிஹ் தனது டுவிட்டர் பக்கத்தில், இந்த முன்முயற்சிக்காக எனது பாரட்டுகளை மோடிக்கு தெரிவித்து கொள்கிறேன். கோவிட்-19 வைரைஸ எதிர்கொள்ள கூட்டு முயற்சி தேவைப்படுகிறது. இத்திட்டத்தை மாலத்தீவு வரவேற்கிறது என்று பதிவிட்டிருந்தார்.
இலங்கை அதிபர் டுவிட்:
இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே தனது டுவிட்டர் பக்கத்தில், சிறந்த முன்முயற்சிக்கு நன்றி. ஆலோசனையில் பங்கேற்கவும், நாங்கள் கற்றுக் கொண்டதை பகிரவும் , மற்ற நாடுகளில் இருந்து கற்றுகொள்ளவும் இலங்கை தயாராக உள்ளது. இந்த கடினமான காலங்களில் ஒற்றுமையுடன் ஒன்றிணைந்து நமது குடிமக்களைப் பாதுகாப்பாக வைத்திருப்போம் என்று பதிவிட்டிருந்தார்.
நேபாள பிரதமர் டுவிட்:
நேபாள பிரதமர் கே.பி.சர்மா ஒலி தனது டுவிட்டர் டுவிட்டர் பக்கத்தில், பிரதமர் மோடியின் யோசனையை வரவேற்கிறேன். கொரோனா வைரஸை எதிர்த்து போராடுவதற்கு வலுவான உத்தியை உருவாக்க வேண்டும். இந்த கொடிய நோயிலிருந்து நமது குடிமக்களைப் பாதுகாக்க சார்க் உறுப்பு நாடுகளுடன் நெருக்கமாக பணியாற்ற எமது அரசு தயாராக உள்ளது என்று பதிவிட்டுள்ளார்.
வங்கதேசம் டுவிட்:
வங்கதேச துணை வெளியுறவு அமைச்சர் ஷாகிரார் ஆலம், தனது டுவிட்டர் பக்கத்தில், எங்கள் பிரதமர் ஷேக் ஹசீனா இந்த திட்டத்தை வரவேற்கிறார். மோடி, மாலத்தீவு அதிபர், நேபாள பிரதமர், பூடான்பிரதமர், இலங்கை அதிபர் மற்று நாட்டு தலைர்களுடன் , ஆக்கபூர்வமான விவாதத்திற்கு ஆர்வமாக உள்ளார். பிராந்தியத்திற்கும் உலகத்துக்கும் இந்த சோதனையான நேரத்தில் முன்னேறிச்செல்லும் வழியைப் பற்றி விவாதிக்க ஒப்புக்கொண்டுள்ளார் என பதிவிட்டுள்ளார்.
ஆப்கன் தூதர் வீடியோ:
புதுடெல்லியில் உள்ள ஆப்கன் தூதர் தாஹிர் காதிரி வெளியிட்டுள்ள வீடியோ பதிவில், கோவிட்-19 வைரஸை எதிர்கொள்ள, ஒரு வலுவான உத்தியை உருவாக்குவதற்கு சரியான நேரத்தில் மோடி விடுத்த அழைப்பை ஏற்றுக்கொள்கிறேன். நாம் ஒன்றுபட்டால் வாழ்வு, பிரிவுபட்டால் தாழ்வு என்று கூறி இருந்தார்.
பாகிஸ்தான் டுவிட்:
பாகிஸ்தான் வெளியுறவு அலுவலக டுவிட்டர் பக்கத்தில், கோவிட்-19 அச்சுறுத்தலை எதிர்கொள்வதற்கு உலக மற்றும் பிராந்திய அளவில் ஒருங்கிணைந்த முயற்சி தேவைப்படுகிறது. சார்க் உறுப்பு நாடுகளின் வீடியோ கான்பரன்சில் நாங்கள் பங்கேற்போம் என பதிவிடப்பட்டுள்ளது.