×

இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதித்தோர் எண்ணிக்கை 85 ஆக அதிகரிப்பு; மராட்டியத்தில் 19 பேருக்கு பாதிப்பு

புதுடெல்லி: இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதித்தோர் எண்ணிக்கை 85 ஆக அதிகரித்துள்ளது. மேலும் இந்தியாவில் 2 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். இதில் ராஜஸ்தான் 17, கேரளா 17, மகாராஷ்டிரா 19, உத்தரபிரதேசம் 11, டெல்லி 6, ஆந்திரா 4, கர்நாடகா 4, லடாக் 3, காஷ்மீர் 1, பஞ்சாப் 1 ஆகிய மாநிலங்களில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். சீனாவில் இருந்து தொடங்கிய கோவிட்-19 கொரோனா வைரஸ் உலக முழுவதும் 127 நாடுகளுக்கு பரவி இருக்கிறது. இதுவரை லட்சக்கணக்கான மக்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். சர்வதேச அளவில் கொரோனா வைரசால் பலியானோர் எண்ணிக்கை 5,000 ஆக அதிகரித்துள்ளது. இந்தியாவிலும் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதனால் பல மாநிலங்களிலும் கடுமையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

உபி, பீகார், ஒடிசா, பஞ்சாப், அரியானா உள்ளிட்ட மாநிலங்களில் பள்ளி, கல்லூரிகள், தியேட்டர், மால்கள் மூட உத்தரவிடப்பட்டுள்ளது. இதனால், பல மாநிலங்கள் முடங்கி உள்ளன. திருப்பதி கோயிலில் பக்தர்கள் பரிசோதனைக்குப் பின்னரே தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுகின்றனர். பரபரப்பாக எதிர்பார்க்கப்பட்ட ஐபிஎல் போட்டிகளும் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. உச்ச நீதிமன்றத்தில் அவசர வழக்குகள் மட்டுமே விசாரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.இந்தியாவிலும் கொரோனா வைரஸ் ஆட்டிப் படைக்கிறது. இதுவரை நாடு முழுவதும் 81 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், கர்நாடகாவைச் சேர்ந்த 76 வயது முதியவர் கொரோனாவுக்கு முதல் பலியாகி இருப்பது மேலும் பீதியை அதிகரித்துள்ளது. இதைத் தொடர்ந்து, இந்தியாவில் வைரஸ் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையை பல மாநிலங்கள் நேற்று முதல் தீவிரப்படுத்தி உள்ளன.

கர்நாடகாவில்கூடும் விழாக்கள் அனைத்தும் ஒருவாரத்திற்கு ரத்து செய்யப்படுவதாக அம்மாநில முதல்வர் எடியூரப்பா நேற்று அறிவித்தார். சுகாதார துறையை சேர்ந்த அனைத்து டாக்டர்கள், ஊழியர்கள், ஒப்பந்த ஊழியர்கள் விடுமுறையை ரத்து செய்து விட்டு உடனடியாக பணிக்கு திரும்பவும் உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும், பலியான முதியவர் வசித்த கலாபுராகி நகரில் உள்ள அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கு ஒருவாரம் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

இதே போல, உத்தரப்பிரதேசம், பீகார், ஒடிசா, பஞ்சாப், அரியானா, ஜம்மு காஷ்மீர், மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில் பள்ளி, கல்ரிகள், தியேட்டர்கள், மால்கள், நீச்சல் குளங்கள், ஜிம்கள் வரும் 31ம் தேதி வரை மூட உத்தரவிடப்பட்டுள்ளது. டெல்லியில், ஜமியா மிலியா, டெல்லி ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகம் உள்ளிட்ட முக்கிய பல்கலைக்கழகங்களுக்கும் வரும் 31ம் தேதி வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ஒடிசா மாநிலத்தில் வைரஸ் தடுப்பு பணிகளை மேற்கொள்ள அம்மாநில அரசு ரூ.200 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு வரும் பக்தர்கள் பரிசோதிக்கப்பட்ட பின்னரே தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுகின்றனர்.  திருமணம் உள்ளிட்ட சுப நிகழ்ச்சிகளையும் ஒத்தி வைக்குமாறு மாநில அரசுகள் கேட்டுக் கொண்டுள்ளன.

Tags : Maratham India ,Victims ,Corona ,Maharashtra ,Central Health Department , India, Coronavirus, Central Health Department, Number of Victims, Corona, Maharashtra,
× RELATED கென்யாவை புரட்டிப்போட்ட கனமழை!:...