சென்னை: வெளிநாடுகளில் இருந்து சென்னை வருபவர்களை விமான நிலையத்தில் பரிசோதனை செய்வதில் சுகாதாரத்துறை மெத்தனப் போக்குடன் செயல்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்தியா முழுவதும் நாளுக்கு நாள் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருகிறது. வெளிநாட்டில் இருந்து வந்த 1288 பேர் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருவதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. இதில் 78 பேரின் ரத்த மாதிரிகள் பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு 72 பேருக்கு பாதிப்பு இல்லை என்று தெரியவந்துள்ளது. ஓமனில் இருந்து சென்னை வந்த காஞ்சிபுரத்தை சேர்ந்த பொறியாளருக்கு விமான நிலையத்தில் இருந்து வீட்டுக்கு சென்று 4 நாட்களுக்கு பிறகு காய்ச்சல் அறிகுறி தெரிந்தது. இதனால் அவர் ஸ்டான்லி மருத்துவமனையில் சேர்ந்தார். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இவருக்கு விமான நிலையத்தில் முறையான சோதனை நடத்தி இருந்தால் பாதிப்பு இருப்பது முன்கூட்டியே தெரியவந்து இருக்கும் என்று பொதுமக்கள் கருத்து தெரிவித்தனர்.
இந்நிலையில் தற்போதும், சென்னை விமான நிலையத்தில் முறையாக பரிசோதனை செய்யப்படுதில்லை என்று கூறப்படுகிறது. வெளிநாட்டில் இருந்து வருபவர்களுக்கு பெயர் அளவில் சோதனை நடத்திவிட்டு வெளியே அனுப்பி விடுவதாகவும், இதன்பிறகு சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சியர்களுக்கு அவர்கள் தொடர்பான விவரங்கள் அனுப்பி வைக்கப்படுவதாகவும், அதன்படி, மாவட்ட ஆட்சியர்கள் அவர்களை தொடர்ந்து கண்காணித்து காய்ச்சல் அறிகுறி இருந்தால் மட்டுமே மருத்துவமனையில் சிகிச்சை அளிப்பதாகவும் கூறப்படுகிறது.எனவே, சென்னை விமான நிலையத்தில் கொரோனா வைரஸ் கண்காணிப்பு பணியை சுகாதாரத்துறையினர் முறையாக மேற்ெகாள்ள வேண்டும் என பயணிகளும், பொதுமக்களும் கோரிக்கை வைத்துள்ளனர்.