×

கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க கிருமி நாசினி மூலம் சுத்தம் செய்யப்பட்டு பஸ்கள் இயக்கம்: மேலாண் இயக்குநர் தகவல்

சென்னை: கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்கும் பொருட்டு கிருமி நாசினிகள்  மூலம் சுத்தம் செய்யப்பட்டு பேருந்துகள் இயக்கப்படுகிறது என்று போக்குவரத்து துறை மேலாண் இயக்குநர் இளங்கோவன் தெரிவித்துள்ளார்.இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கை: தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்கும் பொருட்டு தமிழக அரசின் சார்பில் போர்க்கால அடிப்படையில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.  அந்த வகையில் முதல்வர் தலைமையில் தலைமைச் செயலகத்தில் உயர்மட்ட ஆலோசனை கூட்டம் நடந்தது. இக்கூட்டத்தில் போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மற்றும் போக்குவரத்து துறை முதன்மைச் செயலாளர் தர்மேந்திர பிரதாப் யாதவ் கலந்து கொண்டனர்.

மேலும், கூட்டத்தில் முதல்வர் கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்கும் பொருட்டு, மக்கள் நல்வாழ்வுத் துறையுடன் தொடர்புடைய துறைகள் ஒருங்கிணைந்து பணியாற்றுமாறு உத்தரவிட்டுள்ளார். குறிப்பாக பயணிகள் அதிகம் பயணம் செய்கின்ற பேருந்துகளை நாள்தோறும் முறையாக பராமரித்து, சுத்தம் செய்யுமாறு உத்தரவிட்டுள்ளார்.
எனவே போக்குவரத்துத் துறை அமைச்சர் பேருந்துகளை நல்ல முறையில் சுத்தம் செய்யுமாறு அறிவுறுத்தி உள்ளார். அந்த வகையில்,  அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் சார்பில் ஏறத்தாழ  1082 பேருந்துகள் நாள்தோறும் இயக்கப்பட்டு, அதில் பயணிக்கிற 70 ஆயிரம் பயணிகளின் நலனை பாதுகாத்திடும் வகையிலும், கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்கும் பொருட்டும், மக்கள் நல்வாழ்வுத் துறையின் ஆலோசனையின் பேரில் அரசு விரைவு போக்குவரத்துக்கழக பேருந்துகள் அந்தந்த பணிமனை மற்றும் பேருந்து நிலையங்களில் சுகாதார முறையில் பேருந்தின் உள்ளே, வெளியே மற்றும் படுக்கை, இருக்கை, படுக்கை விரிப்புகள், தலைக்கவர், ஜன்னல் திரை  ஆகியவைகள் கிருமிநாசினிகள்  மூலம் சுத்தம் செய்யப்பட்டு இயக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு மேலாண் இயக்குநர் இளங்கோவன் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.


Tags : spread , spread .coronavirus, Movement , buses ,
× RELATED எய்ட்ஸ் நோயை பரப்ப சிறுவனிடம் அத்துமீறல் வாலிபருக்கு 3 ஆயுள் தண்டனை