×

மின் கணக்கீட்டாளர் பணிக்கு பொறியியல் பட்டதாரிகளையும் அனுமதிக்க வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்

சென்னை: மின் கணக்கீட்டாளர் பணிக்கு பொறியியல் பட்டதாரிகளையும் அனுமதிக்க வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழ்நாடு மின்சார வாரியத்தில் மின்கட்டண கணக்கீட்டாளர் பணிக்கு 1300 பேரை தேர்ந்தெடுக்க ஆள் தேர்வு அறிவிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அதேநேரத்தில் கலை, அறிவியல் மற்றும் வணிகவியல் பட்டதாரிகள் மட்டுமே இப்பணிக்கு தகுதியானவர்கள் என்றும், பிற பட்டதாரிகள் கணக்கீட்டாளர் பணிக்கு விண்ணப்பிக்க தேவையில்லை என்றும் அறிவிக்கப்பட்டிருப்பது மிகுந்த ஏமாற்றமளிக்கிறது.பொறியியல், வேளாண் அறிவியல், கால்நடை அறிவியல் உள்ளிட்ட தொழில்படிப்புகளை படித்தவர்களால் இந்த பணிக்கு விண்ணப்பிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதன்மூலம் அவர்களின் வேலை பெறும் உரிமை பறிக்கப்பட்டுள்ளது. மின்சார வாரியத்தில் பொறியியல் படிப்பைக் கல்வித் தகுதியாகக் கொண்ட உதவிப் பொறியாளர்கள் பணிக்கும் ஆள்தேர்வு அறிவிக்கப்பட்டிருப்பதால், அப்பணிக்கு பொறியியல் பட்டதாரிகள் போட்டியிடலாம் என்ற வாதம் முன்வைக்கப்படக் கூடும்.

 ஆனால், மின்னியல், இயந்திரவியல், சிவில் ஆகிய பிரிவுகளுக்கு மட்டுமே உதவிப் பொறியாளர்கள் தேர்ந்தெடுக்கப்படவுள்ளனர். அப்பணிகளுக்கு குறிப்பிட்ட பாடப்பிரிவு மற்றும் அவற்றை சார்ந்த பாடப்பிரிவுகளில் பட்டம் பெற்றவர்கள் மட்டும்தான் விண்ணப்பிக்க முடியும். பிற பிரிவுகளில் பொறியியல் பட்டம் பெற்றவர்கள் உதவி பொறியாளர் பணிக்கு விண்ணப்பிக்க இயலாது.இன்றைய சூழலில் அரசு வேலைவாய்ப்பு என்பது அரிதாகி விட்டது. வேலையில்லாத் திண்டாட்டம் தலைவிரித்து ஆடும் நிலையில் இருக்கும் வேலைவாய்ப்புகளை பகிர்ந்து கொள்வதைத் தவிர வேறு வழியில்லை. கணக்கீட்டாளர் பணிக்கு விண்ணப்பம் செய்வதற்கான காலக்கெடு இம்மாதம் 23ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், பொறியியல் மற்றும் பிற பட்டங்களை பெற்றவர்களும் மின்சார கணக்கீட்டாளர் பணிக்கு விண்ணப்பிக்கலாம் என்று மின்சார வாரியம் அறிவிக்க வேண்டும்.

என்பிஆர் விளக்கத்துக்கு வரவேற்பு
‘தேசிய மக்கள்தொகை பதிவேடு தயாரிப்பு குறித்த சில அச்சங்கள் போக்கப்படும் வரை அதற்கான கணக்கெடுப்பு நடத்தப்படாது என்று தமிழக அரசும், கணக்கெடுப்பில் ஐயத்திற்கு இடமானவர்கள் என எவரும் அறிவிக்கப்பட மாட்டார்கள் என மத்திய அரசும் அறிவித்திருப்பது வரவேற்கத்தக்கது. இந்த விளக்கங்கள் இஸ்லாமிய சகோதரர்களிடம் நிலவும் அச்சத்தைப் போக்கி, நம்பிக்கையையும், நிம்மதியையும் விதைக்கும் என்று நம்புவோம். சர்ச்சைக்குரிய 3 வினாக்களை மத்திய அரசு நீக்கி அச்சத்தை முழுமையாக போக்க வேண்டும்’ என டிவிட்டரில் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

Tags : Engineering graduates ,Ramadas , electrical, calculator, Let engineering , Ramadas emphasis
× RELATED வணிகர்கள் அவதிப்படுவதால்...