புதுடெல்லி: இளம் தலைவர்களுக்கு பதவிகள் வழங்கப்படும் என காங்கிரஸ் அறிவித்துள்ளது. மத்தியப் பிரதேசத்தில் முதல்வர் பதவி கிடைக்காததால், ஜோதிராதித்யா சிந்தியா அதிருப்தியில் இருந்து வந்தார். சமீபத்தில் ்அவர் பாஜ,வில் இணைந்தார். மேலும், அவரது ஆதரவு அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள்22 பேர் பதவியை ராஜினாமா செய்துள்ளதால், மத்தியப் பிரதேசத்தில் காங்கிரஸ் ஆட்சி கவிழும் சூழல் ஏற்பட்டுள்ளது. மத்திய பிரதேச காங்கிரசில் வீசிய இந்த புயலால் காங்கிரஸ் அதிர்ச்சி அடைந்துள்ளது.
இந்நிலையில், காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் ரன்தீப் சுர்ஜேவாலா டெல்லியில் நேற்று அளித்த பேட்டி: திறமையானவர்கள் இடம் பெயர்வது காங்கிரசில் நடக்கவில்லை.
இந்த கேள்விக்கு ராகுல் ஏற்கனவே பதில் அளித்து விட்டார். ஒருவர் காங்கிரசில் இருந்து வெளியேறுவது, எங்கள் அனைவருக்கும் மிகுந்த வேதனை அளிக்கிறது. கொள்கை முக்கியமா?, தற்காலிக பதவி அல்லது அதிகாரம் முக்கியமா? என்பது பற்றி ஒருவர் சிந்திக்க வேண்டும். இதை தெளிவாக உணரும்போது, எல்லாம் சரியாக இருக்கும். இளம் தலைவர்களுக்கு காங்கிரஸ் கட்சியில் போதிய இடம் உள்ளது. அவர்களுக்கு பொறுப்பான பதவிகள் வழங்கப்படும். சிலருக்கு மாநிலங்களவை தேர்தலில் ஏற்கனவே வாய்ப்புகள் வழங்கப்பட்டுள்ளன. காங்கிரஸ் கட்சியின் அடிமட்டத்தில் இருந்து வந்த பலருக்கு, முக்கிய பதவிகள் வழங்கப்பட உள்ளன. இவ்வாறு அவர் கூறினார்.