×

தேர்வு நேரம் என்பதால் ஞாபக சக்தியை அதிகரிக்கும் வல்லாரை கீரைக்கு ‘டிமாண்ட்’

திருவில்லிபுத்தூர்: தேர்வு நேரம் என்பதால் ஞாபக சக்தியை அதிகரிக்கும் வல்லாரை கீரை விற்பனை சூடுபிடித்துள்ளது. கீரைகளில் சிறுகீரை, அரைக்கீரை, அகத்திக் கீரை, மணத்தக்காளி கீரை, தண்டுக்கீரை, வெந்தயக்கீரை, முருங்கைக்கீரை என பலவகையான கீரைகள் உண்டு. ஒவ்வொரு கீரையும் மருத்துவ குணம் வாய்ந்தது. வல்லாரை கீரைக்கு ஞாபக சக்தியை அதிகரிக்கும் தன்மை உண்டு. தற்போது அரசு பொதுத்தேர்வு நடந்து வருவதால் ஞாபக சக்தியை அதிகரிக்க பெரும்பாலான பெற்றோர் தங்களது குழந்தைகளுக்கு அன்றாட உணவில் வல்லாரை கீரை கொடுத்து வருகின்றனர்.

இதனால் திருவில்லிபுத்தூர் பகுதியில் கடந்த 2 வாரங்களாக வல்லாரை கீரை விற்பனை சூடுபிடித்துள்ளது. தேவை அதிகரித்துள்ளதால் கீரைக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. 25 அல்லது 30 இலை கொண்ட ஒரு சிறிய கட்டு ரூ.25க்கு விற்பனையாகிறது. இதுகுறித்து வியாபாரி ராமசாமி கூறுகையில், ‘கடந்த இரண்டு வாரங்களாக வல்லாரை கீரையை ஏராளமான பெற்றோர் விரும்பி வாங்கி செல்கின்றனர். இதனால் கீரைக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. மதுரையிலிருந்து வாங்கி வந்து விற்பனை செய்கிறோம்’ என்றார்.

Tags : Exam Time, spinach vallarai
× RELATED பூத் ஏஜெண்டுகளுக்கு பணம் தராத பா.ஜ.க....