சென்னை: தமிழ்நாடு மீனவர் காங்கிரஸ் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் பெர்னாண்டோ முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் மீன்வளத்துறை அமைச்சர் ஆகியோருக்கு அவர் அளித்த கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது: கன்னியாகுமரி மாவட்டம், கடியபட்டணத்தை சேர்ந்த மீனவர்கள் 75 பேர், ஆரோக்யபுரம் மீனவர்கள் 36 பேர், முட்டத்தை சேர்ந்த மீனவர்கள் 53 பேர், கன்னியாகுமரியை சேர்ந்த 25 பேர், ராஜாக்கமங்கலம் துறையை சேர்ந்த 80 பேர், ராமன்துறையை சேர்ந்த 4 பேர், மேல்மிடாலத்தை சேர்ந்த 16 பேர், மிடாலத்தை சேர்ந்த 5 பேர், இனயம் புத்தன்துறை, குறும்பனை, பூத்துறை, தூத்தூர் போன்ற பகுதியை சேர்ந்த 600க்கும் மேற்பட்ட மீனவர்கள் மேலும் தூத்துக்குடி, திருநெல்வேலி, நாகப்பட்டினம் மற்றும் ராமநாதபுரத்தை சேர்ந்த மீனவர்கள் என 721 பேர் ஈரான் நாட்டில் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர்.
கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக ஈரான் அரசு அந்நாட்டில் உள்ள மீன்பிடி துறைமுகங்களை மூடியது. இதனால் மீனவர்கள் துறைமுகத்தில் இருந்து வெளியேறவோ அல்லது கடலுக்கு சென்று மீன்பிடிக்கவோ அனுமதிக்கப்படவில்லை. மேலும் ஈரானில் இருந்து இந்தியா வரும் விமான சேவைகளும் பாதிக்கப்பட்டுள்ளன. எனவே ஈரான் நாட்டில் சிக்கி தவிக்கும் தமிழக மீனவர்களை தனி விமானம் மூலம் உடனடியாக அழைத்து வர நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.