- லஞ்ச ஆய்வாளர்
- திருப்பதி இன்ஸ்பெக்டர்
- இன்ஸ்பெக்டருக்கு வீட்டு லஞ்சம்
- அறைகள்
- பண்ணைகள்
- திருப்பதி
- தோட்டங்கள்
- வீடுகள்
திருமலை: திருப்பதி அருகே இன்ஸ்பெக்டர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் அதிரடியாக சோதனை செய்தனர். இதில் பல கோடி மதிப்பு சொத்து ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டது.திருப்பதி காவல்துறை கட்டுப்பாட்டு அறை இன்ஸ்பெக்டர் வெங்கடப்பா. இவர் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக கிடைத்த தகவலின்பேரில் விஜயவாடாவில் இருந்து நேற்று முன்தினம் திருப்பதி மாருதிநகருக்கு வந்த லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் அவரது வீடு மற்றும் எஸ்டிவி நகரில் வசிக்கும் உறவினர் வீடுகள் என பல இடங்களில் இரவு வரை சோதனை நடத்தினர். இதில் பல கோடி மதிப்புள்ள முக்கிய சொத்து ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
இதுகுறித்து லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கூறியதாவது: வெங்கடப்பா, கடந்த 1996ல் எஸ்ஐயாக பணியில் சேர்ந்தார். கடந்த 2008ம் ஆண்டில் திருப்பதி அடுத்த திருச்சானூரில் உள்ள ஹரிஜனாவாடாவில் ஒரு வீட்டை அவரது பெயரில் வாங்கினார். அவரது மனைவி பெயரில் மாருதிநகரில் கடந்த 2013ம் ஆண்டு 2 மாடிகள் கொண்ட மற்றொரு வீட்டை வாங்கினார். இதுதவிர இருவர் பெயரிலும் தனலட்சுமி நகரில் நான்கு மாடி வீட்டை கட்டி வருகிறார். அவிலாலா கிராமத்தில் கடந்த 2009 முதல் 2014 வரை மூன்று வீட்டு மனைகள், 2 இடங்களில் விவசாய நிலங்கள், கலிகிரியில் 4 ஏக்கரில் நாவல்பழ தோட்டம், தனது சொந்த ஊரில் மூன்றரை ஏக்கர் மாம்பழ தோட்டம் ஆகியவற்றை அடுத்தடுத்து வாங்கியுள்ளார். இதுதவிர 2 வங்கிகளில் 9 லட்சம் வைப்பு தொகை, 160 கிராம் தங்கம், சேமிப்பு கணக்கில் 1.25 லட்சம் மற்றும் விலையுயர்ந்த 2 பைக்குகள் இவர் பெயரில் உள்ளது. இதுதொடர்பான அனைத்து சொத்து ஆவணங்களையும் பறிமுதல் செய்து விசாரிக்கிறோம் என்றனர்.