×

தமிழர் நாகரிக தொன்மையை நிரூபித்த கீழடியில் அமையுமா அருங்காட்சியகம்?...நிதி ஒதுக்கியும் கல்லைக் கூட நடவில்லை

திருப்புவனம்: தமிழக அரசு நிதி ஒதுக்கியும் கீழடி அருங்காட்சியகத்திற்கு கல் நடும் பணி கூட துவங்கவில்லை என தமிழ் ஆர்வலர்கள் வேதனை தெரிவித்துள்ளனர். சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே கீழடியில் கடந்த 2015, ஜூன் முதல் இதுவரை 5 கட்ட அகழாய்வுகள் நடந்துள்ளன. முதல் 3 கட்ட அகழாய்வை மத்திய தொல்லியல் துறை நடத்தியது. இதில் தங்க தாயக்கட்டை, அரசு முத்திரை, செங்கல் கட்டுமானம், உறை கிணறுகள், முத்து, பவளம், தமிழ் பிராமி எழுத்துக்கள் கொண்ட பானை, இரும்பு ஆயுதங்கள் உள்ளிட்டவைகள் கண்டெடுக்கப்பட்டன. இப்பொருட்கள் அனைத்தும் மத்திய தொல்லியல் துறை வசம் சென்னை, பெங்களுரூ உள்ளிட்ட இடங்களில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன. அடுத்த இரண்டு கட்ட அகழாய்வுகளையும் தமிழக தொல்லியல் துறை நடத்தியது. இதில் நெசவுத்தொழிலுக்கு பயன்படுத்தப்படும் பொருட்கள், உறைகிணறு, விலங்கு எலும்புகள், தண்ணீர் தொட்டி, சுடுமண் குழாய், வட்ட வடிவிலான பானை, மூடியுடன் கூடிய பானை, பானை ஓடுகள், சூதுபவளம், அரை இஞ்ச் அளவிலான பானை உள்ளிட்டவைகள் கண்டறியப்பட்டன. தற்போது ஆறாம் கட்ட அகழாய்வு நடந்து வருகிறது. கீழடியில் கிடைத்த பொருட்கள் அனைத்தும் 2 ஆயிரத்து 600 ஆண்டுகளுக்கு முற்பட்டவை என ஆய்வு முடிவில் தெரியவந்தது.

2 ஆயிரத்து 600 ஆண்டுகளுக்கு முன்பே தமிழர்கள் மிகச்சிறந்த நகர நாகரிகத்துடன் வாழ்ந்ததை இந்த ெதால்பொருட்கள் நிரூபித்தன. மேலும் கீழடி அகழாய்வு பொருட்களை வைத்து அருங்காட்சியகம் அமைக்க வேண்டும் என கோரிக்கை எழுந்தது. இதைத்தொடர்ந்து கடந்த 2019, ஏப்ரல் 28ம் தேதி கீழடி அரசு பள்ளி விளையாட்டு மைதானம் அருகே 2 ஏக்கர் நிலத்தை வருவாய்த்துறையினர் கையகப்படுத்தி தொல்லியல் துறை வசம் ஒப்படைத்தனர். பின்னர் தமிழக தொல்லியல் துறை இடத்தை அளவீடு செய்து, நடுவதற்காக கொண்டு வந்து கற்களை அடுக்கியது. தொடர்ந்து அருங்காட்சியகம் அமைக்க தொல்லியல் துறையின் வரைபட பிரிவும் வரைபடத்தை தயார் செய்யும் பணியில் ஈடுபட்டது. அருங்காட்சியகம் அமைக்க தமிழக அரசு பட்ஜெட்டில் நிதியும் ஒதுக்கியது. ஆனால் தற்போது வரை அருங்காட்சியக இடத்தில் அளவீடு செய்து கற்கள் கூட நடப்படாமல் அப்படியே கிடப்பில் போடப்பட்டுள்ளது. இதனால் கீழடி அருங்காட்சியகம் அமையுமா என சந்தேகம் எழுந்துள்ளது. தினசரி ஆயிரக்கணக்கானோர் கீழடிக்கு வந்து செல்லும் நிலையில், தற்போது 6ம் கட்ட அகழாய்வு தொடங்கியவுடன் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளின் வருகையும் அதிகரித்துள்ளது. எனவே கீழடி அருங்காட்சியக பணிகளை விரைவுப்படுத்த வேண்டும் என தமிழ் ஆர்வலர்கள், சுற்றுலாப்பயணிகள் வலியுறுத்தியுள்ளனர்.



Tags : Aadiyyil Amiyuma Museum ,museum ,Tamil , Tamil Civilization, Underground, Museum
× RELATED ஸ்ரீவாரி அருங்காட்சியகம்