சென்னை: என்பிஆர் பணி தமிழகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது என அமைச்சர் உதயகுமார் அறிவித்துள்ளார். இந்தியாவில் 10 ஆண்டுகளுக்கு ஒரு முறை மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டு வருகிறது. கடைசியாக கடந்த 2011-ம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. மத்தியில் ஆளும் பாஜக தலைமையிலான அரசு 2021-ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பு பணிகள் நடத்த மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.
இதற்கிடையே, தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பு, தேசிய குடிமக்கள் பதிவேடு ஆகியவற்றுக்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் பல்வேறு போராட்டங்கள் நடந்து வருகின்றன. 2011-ம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்புக்கு உதவியாக 2010-ம் ஆண்டு மக்கள் தொகை பதிவேடு கொண்டுவரப்பட்டது. ஆனால் 2010-ம் ஆண்டு மக்கள் தொகை பதிவேட்டில் இருந்து முற்றிலும் வேறுபட்டது, தற்போது மத்தியில் ஆளும் பாஜக தலைமையிலான அரசு அறிவித்துள்ள 2020-ம் ஆண்டு தேசிய குடிமக்கள் தொகை பதிவேடு.
இது ஒரு பெரிய மற்றும் மோசமான நிகழ்ச்சி நிரலைக்கொண்டுள்ளது என்றும், உள்நோக்கம் கொண்டது; அபாயகரமானது என்று குற்றம்சாட்டியுள்ளனர். 2021-ம் ஆண்டுக்கான மக்கள் தொகை கணக்கெடுப்பு வருகிற ஏப்ரல் 1-ம் தேதி தொடங்கி செப்டம்பர் 30-ம் தேதிக்குள் முடிக்கப்பட வேண்டும். இந்த கணக்கெடுப்பின்போது 31 கேள்விகள் கேட்கப்பட்டு அதற்கான பதில்களை பதிவு செய்ய வேண்டும் என்று தமிழக அரசின் அரசிதழில் வெளியிடப்பட்டது.
இந்நிலையில் என்பிஆர் குறித்து தமிழக வருவாய்த்துறை அமைச்சர் உதயகுமார் செய்தியாளர்களிடம் பேட்டியளித்தார். அப்போது, 2010-ல் இந்தியா முழுவதும் என்பிஆர் அமல்படுத்தப்பட்டது. மத்திய அரசு இயற்றிய சட்டத்தை ரத்து செய்ய மாநில அரசுக்கு அதிகாரம் இல்லை என்றார். மேலும், மக்கள் தொகை கணக்கெடுப்பின் ஒரு பகுதியாக என்பிஆர் கணக்கெடுப்பு நடக்கிறது. தற்போது கொண்டு வரப்பட்டுள்ள என்பிஆரில் கூடுதலாக 3 கேள்விகள் உள்ளன.
என்பிஆர் கேள்விகள் தொடர்பான விளக்கங்களை மத்திய அரசிடம், தமிழக அரசு கேட்டுள்ளது. மத்திய அரசு இன்னும் அளிக்காத நிலையில் தமிழகத்தில் என்பிஆர் கணக்கெடுப்பு பணி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. மக்கள் தொகை கணக்கெடுப்பு மட்டும் நடத்தப்படும். மக்கள் தொகை கணக்கெடுப்பு ஏப்ரல் 1-ம் தேதி தொடங்கும் நிலையில், என்பிஆர் பணி தமிழகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.