×

கோடை வெயிலின் தாக்கம் அதிகரிப்பு: மண்பானை விற்பனை சூடுபிடித்தது

காங்கயம்: கோடை வெயில் தாக்கம் அதிகரிப்பால் காங்கயம் பகுதியில் குழாய் வைத்த மண்பானைகள் விற்பனை அதிகரித்துள்ளது. கோடை தொடங்குவதற்கு முன்பே கடந்த 15ம் தேதியில் இருந்து தமிழகம் முழுவதும் வெயிலின் தாக்கம் அதிகரிக்க துவங்கியது. இதனால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் கடும் அவதிகுள்ளாகின்றனர். இந்நிலையில் கடந்த ஒருவாரமாக திருப்பூர், தாராபுரம், காங்கயம் ஆகிய பகுதிகளில் அனல்காற்று வீசியது. இதனால் வெயிலின் தாக்கம் அதிகமாக காணப்பட்டது. இதன் காரணமாக கரும்பு சாறு இளநீர், வெள்ளரிக்காய், தர்பூசணி, பழச்சாறு  போன்றவற்றின் விற்பனை அதிகமாக இருந்து வருகிறது. கோடை வெப்பத்தில் இருந்து தப்பிக்க பொதுமக்கள் பல வழிகளை கையாண்டு வருகின்றனர். அந்த வகையில் காங்கயம் பகுதிகளில் தற்போது மண்பானை விற்பனை சூடுபிடித்துள்ளது. ஏழைகளின் குளிர்சாதன பெட்டி என அழைக்கப்படும் மண் பானைகள் அதிகம் விற்கப்படுகின்றன. இதில் குழாயுடன் கூடிய மண்பானைகள், பொதுமக்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.

என்னதான் வீட்டில் பிரிஜ் இருந்தாலும், மண்பானையில் தண்ணீர் வைத்து குடிப்பது போல் சுவை இருப்பதில்லை. மேலும் தற்போது இயற்கை முறைக்கு மக்கள் அதிகம் முக்கியத்தும் தருகின்றனர். இதையடுத்து, பானை விற்பனையாளர்கள், குழாய் வைத்த பானைகளை பல்வேறு வடிவங்களில் விற்பனைக்கு குவித்துள்ளனர். இந்த பானைகள் வடிவத்திற்கு ஏற்ப, 250 முதல், 400 ரூபாய் வரை விற்கப்படுகின்றன. மின்சார செலவே இல்லாமல் நீரை குளிர்விக்கும் மண்பானையை தேடி மக்கள் படையெடுக்க தொடங்கியுள்ளனர். இதனால் விற்பனையாளர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

இது குறித்து மண்பானை விற்பனையாளர் கூறுகையில், வெயிலின் தாக்கம் அதிகரிப்பால் மனிதனுடை உடலில் இயற்கையாகவே வறட்சி ஏற்படுகிறது. இதனால் பொதுமக்கள் அடிக்கடி தண்ணீர் குடிக்கின்றார்கள். மேலும் பிரிஜ்ஜில் வைத்து தண்ணீர் குடிப்பதால் சளி, காய்ச்சல் போன்ற பாதிப்புகள் ஒரு சிலருக்கு ஏற்படும். ஆனால் மண்பானையில் தண்ணீர் உற்றி வைத்து குடிப்பதால் எவ்வித பாதிப்பும் ஏற்படாது. எத்தனை நாள் வைத்தாலும் தண்ணீர் கெட்டுபோகாது.
கடந்த சில மாதங்களாக போதிய மண் கிடைக்காமல் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் தற்போது மண்பானை விலை சற்று உயர்வாக உள்ளது. மக்களிடையே இயற்கை முறைகள் குறித்த விழிப்புணர்வு அதிக அளவு ஏற்பட்டுவிட்ட காரணத்தினால் மண்பானைகள் விற்பனை அதிகரித்துள்ளது. என தெரிவித்தார்.

Tags : clay pot
× RELATED மணல் விற்பனை: தமிழ்நாடு அரசு நிலை...