கூடலூர்: கூடலூர் அருகே குடியிருப்பு பகுதியில் புகுந்த காட்டு யானை நெல் மூட்டைகளை சேதப்படுத்தியது. விவசாயிகள் இழப்பீடு வழங்க கோரிக்கை விடுத்துள்ளனர். கூடலூர் அடுத்த மதுரை ஊராட்சிக்குட்பட்ட மண் வயல் பகுதியை அடுத்த கோழி கண்டி கிராமத்தில் வசிப்பவர் பார்வதி. விவசாயி. இவரது வீட்டின் முன் அறுவடை செய்யப்பட்ட நெல் மூட்டைகளை அடுக்கி வைத்திருந்தார். நேற்று முன்தினம் குடியிருப்பு பகுதிக்குள் நூழைந்த ஒற்றை காட்டு யானை பார்வதி வீட்டில் அடக்கி வைத்திருந்த நெல் மூட்டைகளை சேதப்படுத்தி நெல்லை சாப்பிட்டு சென்றுள்ளது. ஏற்கனவே இவர்களது 4 ஏக்கர் வயலில் அறுவடைக்கு தயாரான நிலையில் இருந்த நெல் கதிர்களை காட்டு யானைகள் புகுந்து சேதப்படுத்தியது. யானையால் சேதமடைந்தது போக மீதி உள்ள நெல்கதிர்களை அறுவடை செய்து, அதனை மூட்டைகளில் அடுக்கி வைத்திருந்த நிலையில், மீண்டும் காட்டு யானைகள் மூட்டைகளை சேதப்படுத்தியுள்ளதால், பெரும் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக விவசாயி கூறினார்.
இது தொடர்பாக ஏற்கனவே இழப்பீடு வழங்க கோரி மாவட்ட வன அலுவலர் மற்றும் வருவாய் கோட்டாட்சியரிடம் மனு கொடுத்தும் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. இந்த ஒற்றை யானை கடந்த இரண்டு மாதங்களுக்கும் மேலாக கிராமங்களுக்குள் புகுந்து வீடுகளையும், விவசாய பயிர்களையும் சேதப்படுத்தி வருகிறது. காட்டு யானை குடியிருப்பு மற்றும் விவசாய நிலங்களுக்குள் வராமல் தடுக்கவும், விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.