அண்ணாநகர்: கோயம்பேடு பேருந்து நிலையத்தில் பயணிகளிடம் தொடர்ந்து லேப்டாக்கள் திருடிய கொள்ளையனை போலீசார் கைது செய்தனர். அவரிடமிருந்து 15 லேப்டாப்களை போலீசார் பறிமுதல் செய்தனர். கோயம்பேடு பேருந்து நிலையத்திற்கு வரும் வௌியூர் பயணிகளிடம் விலையுயர்ந்த லேப்டாப்கள் திருடப்படுவதாக போலீசாருக்கு தொடர்ந்து புகார்கள் வந்தது. இதனையடுத்து லேப்டாப் கொள்ளையனை பிடிக்க அண்ணா நகர் துணை ஆணையர் முத்துசாமி, தலைமையிலான தனிப்படை போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். பெங்களூரு செல்லும் அரசு பேருந்தில் நேற்று முன்தினம் நள்ளிரவு தனிப்படை போலீசார் மாறுவேடத்தில் கண்காணித்தனர். அப்போது, சந்தேகத்தின் பேரில் ஒருவரை பிடித்தனர். அந்த நபர் முன்னுக்குப்பின்முரணாக பேசியதால் அவரை காவல் நிலையம் அழைத்து வந்தனர். விசாரணையில், கோயம்புத்தூர் மாவட்டத்தை சேர்ந்த கதிர்வேல் (46) என்பதும், இவர் பல வருடங்களாக கோயம்பேடு பஸ் நிலையத்தில் லேப்டாப் திருடியதும் தெரியவந்தது. இதனையடுத்து அவரிடம் இருந்து விலை உயர்ந்த 15 லேப்டாப்கள் பறிமுதல் செய்தனர். கதிர்வேலை கைது செய்து நீதி மன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.