போடி: பப்ஜி கேம் விளையாடிய வாலிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் போடியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தேனி மாவட்டம், போடி, ஆட்கொண்டான் தெருவை சேர்ந்தவர் ராசு. பால் பண்ணை உரிமையாளர். இவரது மகன் கவுதம் (20). ஐடிஐ படித்துவிட்டு கோவையில் வேலை பார்த்து வந்தார். சில வாரங்களுக்கு முன் வேலையை ராஜினாமா செய்து விட்டு போடிக்கு திரும்பினார். இவருக்கு ‘பப்ஜி கேம்’ விளையாடும் பழக்கம் இருந்ததால், எப்போதும் செல்போனும் கையுமாகவே இருந்து வந்தார்.
நேற்று வீட்டில் யாரும் இல்லாதபோது திடீரென தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். வீட்டிற்கு வந்த அவரது தாய் சித்ரா, மகன் தூக்கில் தொங்குவதை பார்த்து அதிர்ச்சியடைந்தார். இதுகுறித்து போடி நகர் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் கவுதமின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக போடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்குப்பதிவு செய்து பப்ஜி கேம் விளையாட்டு காரணமாக அவர் தற்கொலை செய்தாரா என தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.