×

டெல்லியைப் போல மகாராஷ்டிராவிலும் வன்முறையை நிகழ்த்த விரும்பியது பாஜக: சிவசேனா குற்றச்சாட்டு

மகாராஷ்டிரா: டெல்லியைப் போல மராட்டியத்திலும் வன்முறை நடக்க பாஜக விரும்பியது என்று சிவசேனா குற்றம் சாடியுள்ளார். மகாராஷ்டிராவில் சிவசேனா தலைமையிலான மகா விகாஸ் கூட்டணி, 100 நாள் ஆட்சியை நிறைவு செய்ததை அடுத்து முதலமைச்சர் உத்தவ் தாக்கரே அயோத்தி சென்று ராமரை வழிபட்டார். இந்தநிலையில் அயோத்தி சென்று வந்த முதலமைச்சர் உத்தவ் தாக்கரேயை ‘போலி வேடம் போடுபவர் என பா.ஜனதா விமர்சித்ததாக கூறப்படுகிறது. இதற்கு சிவசேனாவின் அதிகாரப்பூர்வ ஏடான சாம்னா பதிலடி கொடுத்துள்ளது.

இதுகுறித்து சாம்னாவில் கூறப்பட்டுள்ளதாவது: அயோத்தி பயணம் குறித்து முதலமைச்சர் உத்தவ் தாக்கரேயை விமர்சிக்கும் பாஜக தான் உண்மையில் போலி வேடம் போடுகிறது. உத்தவ் தாக்கரே அயோத்தி சென்றதற்கு பாஜகவினர் மகிழ்ச்சிதான் அடைந்திருக்க வேண்டும். ஆனால் பாஜகவினரால் உத்தவ் தாக்கரே அயோத்தி சென்றதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. மராட்டிய பாஜக தலைவர்கள் உத்தவ் தாக்கரேயை விமர்சிப்பதில் இருந்து அவர்களின் தீய நோக்கங்கள் அம்பலப்படுகின்றன. கூட்டணி கட்சியினர் வேறுபட்ட கொள்கைகளைக் கொண்டிருக்கலாம்.

ஆனால் மக்கள் சேவையில் ஈடுபட்டு, மனிதர்களை சமமாக நடத்த வேண்டும். நாங்கள் அதைத் தான் பின்பற்றுகிறோம். குடியுாிமை திருத்தச் சட்ட விவகாரத்தில் டெல்லியைப் போல மராட்டியத்திலும் வன்முறை நிகழ வேண்டும் என எதிர்க்கட்சி (பாஜக) விரும்பியது. ஆனால் உத்தவ் தாக்கரே அந்த பிரச்னையை கவனமாக கையாண்டு சிறிய சம்பவம் கூட நடக்காமல் பார்த்துக் கொண்டுள்ளார். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags : Shiv Sena ,BJP ,Maharashtra ,Delhi , Delhi, Maharashtra, Violence, BJP, Shiv Sena
× RELATED கொரோனா காலத்தில் மருத்துவமனையிடம்...